செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வாராயோ தோழி - பாகம் 2

அடுத்த நாள் காலை, கார் பார்க்கிங்கில் நானும் சந்துருவும் காத்திருக்கையில் சவியும், அர்ச்சனாவும் காரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

"அம்மா தாயே, ரெடி ஆக இவ்வளவு நேரமா? " சந்துரு இருவரையும் பார்த்து கேட்டான்.

நான் சந்துருவிடம் திரும்பி, "இந்த பொண்ணுக மேக்கப் போட்டு முடிக்கிற நேரத்துல, ஒரு 20-20 கிரிக்கெட் மாட்சே நடத்தி முடிச்சிடலாம் மச்சி" என்று சொல்ல, அவன் சிரித்துக் கொண்டு Hive-Five செய்ய கை உயர்த்தினான்.

"நான் சீக்கிரம் ரெடி ஆயிட்டேன். அர்ச்சனா தான் லேட் பண்ணிட்டா" என்று சவி சொல்ல, சந்துருவிடம் High-five செய்ய உயர்த்திய கையை உடனே பின் வாங்கினேன்.

அப்போது காரின் பின் சீட்டில் இருந்த அர்ச்சனா கட் செய்த ஆப்பிளை சந்த்ருவிற்கு கொடுத்து விட்டு, எனக்கும்  ஒரு சிறு புன்னகையுடன் நீட்டினாள். அதைப் புன்னகையுடன் நான் வாங்க,

"பார்ரா, டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இந்த டிரிப்ல அடிச்சுகுவாங்கனு பார்த்தா, இப்பவே ரெண்டும் சமரசம் ஆயிடிச்சு " - சவி கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

"அர்ச்சனா, அவனுக்கு ஆப்பிள் கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு நிமிசம் உன் அழகான ப்ளூ கலர் சிவிக் காரை நினைச்சுப் பாரு. அவன் உன் காரை காணாம போக வைச்ச துரோகி"  ஒரு எக்ஸ்ட்ரா ஆப்பிள்காக சந்துரு அவனது பரட்டை வேலையை ஆரம்பித்தான்.

"இப்படி எல்லாம் பேசி என் கிட்ட நீ ஆப்பிள் வாங்க முடியாது. கார் போனா போகட்டும். அவன் என்ன வேணும்னா பண்ணினான்? நான் தான் நேத்து கொஞ்சம் ஒவரா ரியாக்ட் பண்ணிட்டேன். சாரி தியாகு" அர்ச்சனா சொன்னதைக் கேட்டதும் என் முகத்தில் 1000 வாட்ஸ் புன்னகை ஒளிறியது.

"ரைட்டு நீங்க ரெண்டு பேரும் முஸ்தபா ஆயிட்டீங்க. இந்த சந்தோசத்தை நாம ஆப்பிள் வெட்டிக் கொண்டாடலாம்"  என்று சந்த்ரு உற்சாகமாகக் கூறினான்.

அதற்கு சவி, "சுத்தி சுத்தி ஆப்பிள்லயே குறியா இருக்கான் பாரு. ஆனா ஆப்பிள் முடிஞ்சு போச்சு.உன் பேட் லக் " என்றாள்.

" மச்சி பொண்ணுக கிட்ட ஆப்பிள் போனாலே பிரச்சனை தான்.  ஆதாம் ஏவாள் காலத்துல ஆரமிச்ச ஆப்பிள் பிரச்சனை இன்னைக்கு வரைக்கும் முடியலை பாரு. இந்த மாதிரி பிரச்சனை வரும்னு தான் நானும் கொஞ்சம் எடுத்து வைச்சிருக்கேன். என் பேக்ல இருக்கும் பாரு " என்று நான் சொல்ல அர்ச்சனா எனது பேக்-ஐ ஆப்பிள் எடுக்க திறந்தாள்.

"வாவ். ஒரு ஃப்ருட் ஸ்டாலே உன் பேக்ல இருக்கும் போல!!! " உள்ளே இருந்த பழங்களைப் பார்த்ததும் அர்ச்சனா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

" கூடவே ஒரு பேக்கரியும் இருக்கும் பாரு. காலைல இவன் ஹோட்டல்ல இருந்து எடுத்த ஐட்டத்தை மட்டும் யாராவது பார்த்திருந்தா, ஃப்ரீ பிரேக்ஃபாஸ்ட்னு இனி எந்த ஹோட்டல்லயும் போர்ட் வைக்க மாட்டான் " சந்துரு கிண்டலாகக் கூற அனைவரும் சிரித்தனர்.

அர்ச்சனா என்னை ஒரு கேள்விக் குறியுடன் நோக்க, " இன்னைக்கு சவி விரதம். அவ ஈவ்னிங் தான் சாப்பிடுவா. நாம போற எடத்துல ஏதாச்சும் கிடைக்குமானு தெரியாது. அதனால தான் அவளுக்காக எடுத்து வைச்சு இருக்கேன் " என்று கூறினேன்.

"எப்பவும் போல, யூ ஆர் சோ ஸ்வீட் தியாகு " என்று சவி சொல்ல என்  ரியர்  வியூ மிரரில் என் பார்வைப் பதிந்தது. அதில் அர்ச்சனா  என்னையே  பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் என் மனம் துள்ளியது.  அவள் பார்வையில் இருந்த வித்தியாசத்தை நான் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்த அரை மணி நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் அனைவரும் காரில் இருந்து இறங்கி ஃபெர்ரியில்(Ferry) ஏறினோம். சின்ன சின்னத் தீவுகளாக அங்கு ஆயிரக்கணக்கான தீவுகள் இருக்க அந்த ஃபெர்ரியின் கேப்டன் சில முக்கியத் தீவுகளின் பெயரையும், அதன் வரலாறையும் அறிவித்துக் கொண்டே செல்ல, சவியும், அர்ச்சனாவும்  ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர். சந்துரு வழக்கம் போல அங்கு இருந்த அமெரிக்கப் பெண் குட்டிகளிடம் பீட்டர் விட்டுக் கொண்டிருக்க, நான் ஒரு மூலையில் நின்று அமைதியாக இயற்கை அழகில் ஒன்றிக் கொண்டு இருந்தேன்.

" என்ன மெர்மெய்ட் ஏதாச்சும் தெரியுதா? தனியாப் பார்த்து ரசிச்சுட்டு இருக்கே? "  குரல் கேட்டு திரும்பினேன். காற்றில் கட்டுப்பாடன்றி கலைந்து பறந்து கொண்டிருந்த கூந்தலை ஒரு கையால் சரி செய்தவாறே என்னை நோக்கி அர்ச்சனா வந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்து விட்டு அவளை நோக்கி திரும்பி நின்றேன்.

எனக்கு அருகில் வந்து நின்ற அவளைப் பார்த்து "என்ன ஃபோட்டோ செசன் எல்லாம் முடிஞ்சிச்சா? " என்றேன்.

"இன்னும் நிறைய மிச்சம் இருக்கு. ஃபேஸ்புக்-க்கு ஒரு நல்ல ப்ரொபைல் பிக்சர் கிடைக்கற வரை எடுத்துத் தள்ளிட்டே இருப்போம்ல" என்று சிரித்தவாறே கூறினாள்.

"எடுக்கற ஃபோட்டோஸ் லாம் பார்த்தா ஃபேஸ்புக்-க்கு எடுக்கற  மாதிரி  தெரியலையே, மேட்ரிமோனியல்-க்கு எடுக்கற மாதிரி இல்லை இருக்கு" அவளை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தேன்.

"என்னைப் பார்த்தா உனக்கு அப்பா அம்மாக்கு அந்த வேலை லாம்  வைக்கிற பொண்ணு மாதிரியா தெரியுது? " ஒரு குறும்புடன் கேட்டாள்.

"ஓ கதை அப்படிப் போகுதா? ஆள் எல்லாம் ஆல்ரெடி ரெடியா? " என்று கேட்டேன். அவள் "நோ" என்று பதில் சொல்ல வேண்டும் என்று அந்த நொடியில் மனதில் தோன்றிய அனைத்து தெய்வத்தையும் வேண்டினேன்.

"அது எல்லாம் எப்பவோ ரெடி. ஆனா ஒரு சின்ன பிரச்சனை அது முடிஞ்சதும் சீக்கிரம் கல்யாணம் தான்" என்றாள்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் என் மனதில் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்து விட்டு, " என்ன அவங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டீங்கறாங்களா? அட்ரஸ் சொல்லு அவனை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்" என்றேன்.

"அம்மா, அப்பா பிரச்சனை இல்லை. அவன் வொய்ஃப் ஜோதிகா தான் பிரச்சனை. அவளை உன்னால முடிஞ்சா தூக்கிடு" என்றவாறே சிரிக்க, அவளுடன் நானும் சேர்ந்து சிரித்தேன்.

"அதுதான் அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு இல்லை. இன்னும் அவனை விட மாட்டீங்களா? அப்படி என்ன தான் அவன் கிட்ட இருக்கு? பொண்ணுகளுக்கு  தமிழ் நாட்டுல வேற யாரையுமே கண்ணுக்கு தெரியாதா? " என்று அனைத்து தமிழ் ஆண்கள் மனதில் இருக்கும் அந்த கேள்வியைக் கேட்டேன்.

"அந்த கண்ணு ஒண்ணே போதும் எத்தனை வருசம் ஆனாலும் அவன் பின்னாடி அலைய வைக்க. அதுவும் இல்லாம அவனோட சிக்ஸ் பேக்..ஓ வாவ். அந்த மாதிரி சிக்ஸ் பேக் வைச்சு இருக்கிறவன் ஒருத்தனாப் பார்த்து தான் லவ் பண்ண போறேன். " என்றாள்.

"இந்த சூர்யா ஒருத்தனால தமிழ் நாட்டுல எத்தனை பையனுகளுக்கு பிரச்சனை" என்று அவனை மனதிற்குள் எல்லா கெட்ட வார்த்தைகளாலும் திட்ட ஆரம்பித்தேன். அதே சமயம் அவளுக்கு பாய் பிரெண்ட் யாரும் இல்லை என்று அறிந்ததில் சிறிது சந்தோசம் அடைந்தேன்.

"சார் எப்படி, அப்பா அம்மாக்கு வேலை வைக்கிற ஐடியா இருக்கா? இல்லை ஆல்ரெடி ஆள் பார்த்தாச்சா" என்று என்னைத் திரும்பக் கேட்டாள்.

"அப்பா அம்மா பார்க்கிறது எல்லாம் போன தலைமுறையோட போச்சு. ஒரு பொண்ணைப் பார்த்து பேசி, மயங்கி கிறங்கணும், அவ பின்னாடியே அலை அலைனு அலையணும், அவ இல்லைனா உலகமே இல்லைனு தோணனும். அப்படி ஒரு பொண்ணுக்காகத் தான் வெயிட்டிங்" என்று பதிலளித்தேன்..

சில நொடிகள் இடைவெளி விட்டு, "ஆனா சீக்கிரம் அப்படி ஒரு பொண்ணைப் பார்த்துடுவேனு நம்பிக்கை வந்துருச்சு" என்று அவள் கண்களைப் பார்த்தாவாறே சொன்னேன்.

என்னை சில நொடிகள் பார்த்தவள், என்னை நோக்கி இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள். என் காதருகே வந்து, " நானும் டும் டும் டும் படம் பார்த்துட்டேன். வேற ஏதாச்சும் டயலாக் சொல்லு"  என்று சொல்ல, அதற்கு இருவரும் இணைந்து சிரித்தோம். எங்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி உருவாகிக் கொண்டு இருந்தது.

அப்போது எங்களை நோக்கி வந்த சவி, " ஹே, எனக்கு இந்த லொக்கேசன் பேக் ரவுண்ட்ல ஒரு போட்டோ எடுத்துக் கொடு" என்று கேமராவை என் கையில் கொடுத்து விட்டு போஸ் கொடுத்து நின்றாள்.

அவளுக்கு போட்டோவை எடுத்து விட்டு, அந்த படத்தைப் பார்த்த நான், " ஒரு மொக்கை கேமரா வைச்சு இருக்கே நீ. இவ்வளவு கேவலமான கேமராவை நான் பார்த்ததே இல்லை. கொஞ்சம் கூட க்ளாரிட்டியே இல்லை. ஜூமும் சரி இல்லை. எங்கே குப்பைத் தொட்டில இருந்து எடுத்தியா இதை? " என்று கிண்டல் பண்ண.

எனக்கு அருகில் இருந்த அர்ச்சனா என் கையில் இருந்த கேமராவைப் பிடுங்கி விட்டு கோபமாக நகர்ந்தாள். எதுவும் புரியாமல் நான் சவியைப் பார்க்க

"அது அவ கேமராடா " என்று என்னிடம் சொல்லிவிட்டு அர்ச்சனாவை நோக்கி சவி நடந்தாள்.

" உனக்கு வேற எதிரி யாருமே வேண்டாம். உன் வாய் ஒண்ணே போதும். ஓட்டை வாய்டா தியாகு உனக்கு" என்று என் மனசாட்சி என்னைத் திட்ட, கோபமாகப் போகும் அர்ச்சனாவைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

-தொடரும்.



செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வாராயோ தோழி - பாகம் 1

"வந்துட்டேன் சவி சிக்னல்-ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் 2 நிமிசத்துல உன் வீட்டுல இருப்பேன்." - பேசிக் கொண்டு இருக்கும் போது கிரீன் சிக்னல் விழ ஃபோனை அணைத்து விட்டு சவிதாவின் வீட்டை நோக்கி எனது காரை செலுத்தினேன். அவள் வீட்டுக்கு செல்லும் இரண்டு நிமிடத்தில் என்னைப் பற்றி,

நான் தியாகு, இன்று உங்களது அமெரிக்க நண்பர் யாரேனும் ஒருவருடன் நீங்கள் போனில் பேசி இருந்தால் அதற்கு காரணம் நானும் ஒருவன். அமெரிக்காவின் முண்ணனி தொலை தொடர்பு அலுவகத்தில் முக்கிய பணி ஆற்றிக் கொண்டு இருக்கிறேன். இதோ இன்றோடு நான் அமெரிக்கா வந்து 3 வருடம் ஆகிறது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க நண்பர்களுடன் ஒரு ட்ரிப் அடிக்கலாம் என முடிவு செய்து இப்போது எனது நெருங்கிய தோழி சவிதாவை அழைக்க சென்று கொண்டு இருக்கிறேன்.

"தியாகு என்ன அதிசயம்! உண்மையாவே சொன்ன நேரத்துக்கு வந்துட்டே? " ஆச்சர்யத்துடன் என்னை சவி வரவேற்றாள்.

"இந்த முணு நாள்ல இன்னும் நிறைய ஆச்சர்யபடுற மாதிரி நடக்கும். கண்டுக்காதே ". அவளுக்கு ஒரு சிரிப்புடன் பதில் அளித்து விட்டு எனது கண்கள் அவளது  வீட்டுக்குள் யாரையோ தேடியது.

" நீ தேடற ஆள் இங்கே இல்லை. அவ Washingdon DC போயிட்டா." சவி எனது தேடலைப் புரிந்து பதில் அளித்தாள்.

"வாட்??? அவ நம்ம கூட Thousand Islands வரானு நீதானே நேத்து நைட் சொன்னே? "

"ஆமா, இன்னைக்கு காலைல ப்ளான் மாறிடிச்சு. அவ White House பார்த்ததே இல்லையாம். ஒரு குரூப் Washington போறாங்க. அவங்களோட அவ ஜாயின் பண்ணிக்கிட்டா"  இதைக் கேட்டதும் எனது முகம் சிறிது வாடியது. அதற்கு காரணம் அர்ச்சனா!!!.

அர்ச்சனா, எங்கள் டீமில் உள்ள அனைவரும்  கடலைப்  போடத்  துடித்துக்  கொண்டு  இருக்கும் அழகிய புது வரவு. எனது நல்ல நேரம் அவள்  சவியின்  ரூம் மேட் ஆக, என்னுடைய தொந்தரவு தாங்க முடியாமல் அர்ச்சனாவையும் இந்த டிரிப்பிற்கு அழைத்திருந்தாள் சவி. இந்த ட்ரிப்பில் அவளை இம்ப்ரெஸ் செய்து நெருங்கி விடலாம். பார்க்கறவன்   ஒவ்வொருத்தன்  வயித்துலயும்  புகையை கிளப்பலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தில் விழுந்த மண்ணினால் தான் என் முகம் வாடியது.

அப்போது கையில் ஒரு ஷாப்பிங் பேக் உடன் உள்ளே நுழைந்தாள் அர்ச்சனா. " சாரி சவி, கொஞ்சம் லேட் ஆயிடிச்சு, இதோ ரெண்டு நிமிசத்துல வந்திடறேன்" அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

சவி, "பரவாயில்லை, இன்னும் டைம் இருக்கு. பை தி வே, இது தியாகு, என்னோட பெஸ்ட் ப்ரண்ட்" என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.

"ஹலோ, நைஸ் டூ மீட் யூ" என்று கை குலுக்கினாள்.

"Pleasure" என்று நானும் கை குலுக்கினேன். அர்ச்சனா அவள் ரூம் உள்ளே நுழையும் வரைக் காத்து இருந்து விட்டு

"ஏய் லூசு, எதுக்கு பொய் சொன்னே?" என்று சவியின் தலையில் குட்டினேன்.

" வலிக்குதுடா பக்கி " என்று என் கையில் ஒரு குத்து விட்டவாறே  "ஆனாலும் அவ வரலைனு சொன்னதும் உன் மூஞ்சி போன போக்கை பார்த்து இருக்கணுமே" என்னை கிண்டல் செய்தாள் சவி.

அடுத்த 5 நிமிடத்துல அர்ச்சனா ரெடியாக, எனது இன்னொரு நண்பன் சந்துரு என்னை கால் பண்ணவும் சரியாக இருந்தது. அவனுடைய காரில் ட்ரிப் போவதாகத் தான் பிளான். அவன் கார் திடீரென ஸ்டார்ட் ஆகவில்லை என்றும் மெக்கானிக் ஷாப்பில் இருப்பதாக சொன்னான். எனது கார் வாங்கி இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதனால் எனது காரில் போக எனக்கு விருப்பமில்லை. அர்ச்சனா தான் அவளது கார் Rental கார் எனவும் அதனால் அவளது காரில் போகலாம் என்றும் சொன்னாள். நான் சந்துருவை வழியில் பிக்கப் பண்ணிக்குவதாக ஃபோன் செய்து சொல்லிவிட்டு நாங்கள் மூணு பேரும் கிளம்பினோம்.

"வாவ், Honda Civic. அர்ச்சனா, intermediate Class Rental a? " என்று கேட்டேன்.

"இல்லை, இது Economy class Rental தான். ஆனா என்னோட லக், அந்த டைம்ல Economy car  எதுவும் இல்லைனு எனக்கு இது கொடுத்தாங்க" என்று பெருமையாக அர்ச்சனா கூறினாள்.

நான், "உண்மையாவே நீ லக்கி தான். பொதுவா Nissan Versa னு ஒரு டப்பா கார் தான் கிடைக்கும்"

"ஓ, எனக்கு Nissan Versa பிடிக்கவே பிடிக்காது. அதை ஓட்டறதுக்கு நான் நடந்தே போவேன்." என்றாள்.

இதற்குள் சந்துரு இருக்கும் மெக்கானிக் ஷாப் வர, காரை நிறுத்தி அவனையும் ஏற்றிக் கொண்டு எங்களது ட்ரிப்பை இனிதே துவங்கினோம்.

"மச்சி, இப்போ தான் நியூ சாங்க்ஸ் எல்லாம் என் ஐ-பாட் ல போட்டு இருக்கேன். இந்த ட்ரிப் பூரா கும் கும்னு பாட்டு கேக்கலாம்" என சந்தோசமாக தனது ஐ-பாட் ஐ வெளியே எடுத்தான்.

"என் கார்-ல FM தவிர வேற எதுவும் வொர்க் ஆகாது " என்று அர்ச்சனா குண்டைத் தூக்கிப் போட்டாள்.

அதற்கு சவி, "என்னது? மூணு நாள் ட்ரிப் நம்ம தமிழ் பாட்டு கேக்காமயா? சான்சே இல்லை "  என்றாள்.

"ஆமாம், FM நம்பி எல்லாம் ட்ரிப் போக முடியாது. நாம ரெண்டல் ஆபிஸ்  போயி கார் மாத்திட்டு போயிடலாம்" என்றேன்.

"வேண்டாம், அங்க போனா எனக்கு மறுபடி சிவிக் கிடைக்காது. எனக்கு இந்த கார் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று அர்ச்சனா மறுத்தாள்.

"அர்ச்சனா, நீ என் பவர் தெரியாம பேசறே. நான் Hertz -ல Platinum Member. நான் போனா அந்த மேனேஜர் எந்திருச்சி நின்னு தான் பேசுவார். அந்த அளவுக்கு என் மேல அவருக்கு மரியாதை. கவலைப் படாதே, உனக்கு இதை விட நல்ல காரா வாங்கித் தரேன்" என்று பந்தாவாக பேசி வண்டியை ஹெர்ட்ஸ் ரெண்டல் ஆபிஸ்-க்கு திருப்பினேன்.

ஒரு மணி நேரம் கழித்து எங்களது காரில், "வொய் திஸ் கொலைவெறி" என்று பாடல் ஒலிக்க சந்துருவும், சவியும் சந்தோசமாக கூட சேர்ந்து பாடிக் கொண்டு இருந்தனர். நான் அமைதியாக வண்டி ஓட்ட, அர்ச்சனா என்னை கோபமாக முறைத்துக் கொண்டு இருந்தாள். காரணம் நாங்கள் இப்போது இருப்பது "Nissan Versa" கார்!

"மச்சி, என்ன சொன்னே, அந்த மானேஜர் நின்னுட்டு தான் பேசுவாரா? அப்ப உன்னை ஆபிஸ்-க்கு உள்ள நிக்க கூட விடாம நாய் விட்டுத் துரத்துனது யாருடா? " - சந்துரு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுனான்.

"சரி ஃப்ரீயா விடு மச்சி, அந்த மானேஜர் விட்ட டோஸ்ல அவனே நொந்து நூடுல்ஸ் ஆயிப் போயி இருக்கான்.  " - சவி எனக்கு சப்போர்ட் ஆகப் பேசினாள்.

அதற்கு சந்துரு, "அதெல்லாம் சரி, நடுவில அந்த ஆளு, IBM Employee இல்லை சாம் ஆண்டர்சன் வந்து கேட்டாலும் இந்த காரைத் தான் தருவேனு சொன்னானே. சாம் ஆண்டர்சன் அமெரிக்கா அளவுல ஃபேமஸ் ஆயிட்டானா? " என்று கேட்டான்.

"அடப்பாவி, சாம் ஆண்டர்சன் இல்லைடா, அவரு சாம் பால்மிசானோ-னு சொன்னாரு. அவரு தான் நம்ம கம்பெனியோட CEO" என்று சொல்ல இருவரும் சிரித்தனர். அப்போது நானும், அர்ச்சனாவும் அமைதியாக இருக்க

சவி, " கம் ஆன் கைய்ஸ், இப்படி நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருந்தா நாம ட்ரிப் போறோமா? இல்லை அன்னா ஹசாரே போராட்டத்துக்கு போறோமானு எனக்கு சந்தேகமா இருக்கு? " என்றாள்.

நான் அர்ச்சனாவிடம் திரும்பி, " சாரி அர்ச்சனா" என்றேன். அதற்கு அவள் பதில் அளிக்காமல் அவள் முகத்தை திருப்பி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஆரம்பமே இப்படி என்றாள், இந்த ட்ரிப் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்துடன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.

-தொடரும்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

ஆகா என்ன பொருத்தம்!!!

"கெட்டி மேளம், கெட்டி மேளம் " ஐயர் உரக்கச் சொல்ல, சுற்றியிருந்த உற்றார், உறவினர் பூக்கள் தூவி வாழ்த்த, நாதஸ்வர நாதமும், மத்தள இசையும் மங்களகரமாக ஒலிக்க, பெற்றோர் கண்களை ஆனந்த கண்ணீர் நிறைக்க, இருவர் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயம் இனிதே துவங்கிய து. அதுவரை பொறுமை காத்த ஒரு சிலரும் பந்தியை நோக்கி நகர, எனக்கு இரண்டு வரிசை முன்னால் அமர்ந்திருந்த அவள் என் பார்வையில் விழுந்தாள்.

"ஒரு வேளை அவளாக இருப்பாளோ? " கூட்டத்தில் சரியாகத் தெரியவில்லை. இரண்டு நிமிட காத்திருப்பிற்குப் பின் புன்னகையுடன் திரும்பிய அவளைப் பார்த்ததும் என் மனதிற்குள் ஒரு இனம் புரியா குறுகுறுப்பு. கல்லூரியில் பார்த்த போது இருந்ததை விட இன்னும் கொஞ்சம் அழகும், பொலுவும் கூடி இருந்தது போலத் தோன்றியது. நெற்றி வகிட்டில் இருந்த குங்குமமும், தடிமனான தங்கச் சங்கிலியும் அவள் இன்னொருவனுக்குச் சொந்தம் ஆகி விட்டதை உறுதி செய்தது. அவளுடன் சென்று பேசலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

அப்போது அவளை நோக்கி சென்ற ஒருவன் தன் கையில் இருந்த கைக்குழந்தையை நீட்ட, "வாடா செல்லம்...அம்மாவை விட்டுட்டு இருக்க முடியலையா என் தங்கத்தாலே?" என்றவாறே வாங்கி முத்தமிட்டாள்.

அவனிடம், " என்னங்க நான் அப்பாவோட சாப்பிட்டுக்கிறேன். உங்களுக்கு டைம் ஆயிடுச்சு இல்ல. நீங்க சாப்பிட்டு கிளம்புங்க " என்றவாறே அவனது தலையிலும் விழுந்திருந்த சிறு பூக்களைத் தட்டி விட்டாள். அப்படி என்றால் அவன் தான் அவள் கணவனா? என்னால் நம்பவே முடியவில்லை. கரு கருவென்று, கன்னங்கள் ஒட்டிப் போய், அவளது நிறத்திற்கும் அழகிற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தான்.

"என்னங்க பந்திக்கு கூட்டம் அதிகமாகுது. நாமளும் போயி சாப்பிடலாமா? " கேட்ட என் மனைவியைத் திரும்பிப் பார்த்தேன். மகாலட்சுமி போல மங்களகரமான தோற்றத்துடன் பட்டுப் புடவையும், தங்க நகைகளும் அவளது அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற, தங்க விக்கிரகம் போல ஜொலித்தாள். இப்படி ஒரு அழகி எனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணி என்றும் போல இன்றும் பெருமிதத்தில் என் முகத்தில் புன்னகை பூத்தது.

"நீ உன் அம்மாவோட போ. நான் பின்னாடி வரேன் " என்று என் துணையை அனுப்பி விட்டு அவளை நோக்கி நகர்ந்தேன். குழந்தையைக் கொஞ்சி கொண்டு இருந்த அவள் என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டாள்.

ஆச்சர்யத்தில் கண்கள் விரிய, " வாவ் வாட் எ சர்ப்ரைஸ்!. உன்னை இங்க பார்ப்பேனு நினைச்சு கூடப் பார்க்கலை. எப்படி இருக்கே? " என்று நலம் விசாரித்தாள்.

"நான் நல்லா இருக்கேன். எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு. நாம கடைசியா பார்த்து ஒரு 5 வருசம் இருக்குமா? " என்று கேட்டேன்.

"இவனுக்கே 5 வயசு ஆச்சு. அதுக்கு முன்னாடி ரெண்டு. ஏழு வருசம் ஆச்சு " என்றாள்.

"காலம் எவ்வளவு வேகமா ஓடுதுனு பார்த்தியா? நேத்து தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு  அதுக்குள்ள..." என்று வியந்தேன்.

"ஆமா...அப்புறம் வீட்டிலிருந்து வந்திருக்காங்களா? " என் பின்னால் அவள் கண்கள் தேடியது.

"அதோ அந்த மெரூன் கலர் புடவை கட்டிட்டு ரெண்டாவது டேபிள்ல இருக்கா பாரு. அவதான் " நான் கை காட்டிய இடத்தில் பார்த்த அவள்,

"வாவ்..ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்காங்க. உனக்கு ஏத்த ஜோடியா தான் பார்த்து இருக்க" என்று பாராட்டினாள்.

"அதோ அங்க நீல சட்டை போட்டுட்டு ஜாமூன் சாப்பிட்டுட்டு இருக்காரே, அவர் தான் என் வீட்டுக்காரர் " அவள் காட்டிய திசையில் அவனே தான்.

"சொல்றேனு தப்பா எடுத்துக்காதே. உன் அழகுக்கு எவ்வளவு பேரு நீ, நான்-னு போட்டி போட்டுட்டு வந்திருப்பாங்க. உனக்கு எந்த  விதத்திலயும்  பொருத்தமே  இல்லாத தப்பான ஆளைத் தேர்ந்தெடுத்திட்ட" என்று நான் சொல்ல புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

"ஆனா ஒண்ணு, அன்னைக்கு நான் உன்கிட்ட சவால் விட்ட மாதிரியே உன்னை விட அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுன நான் தான் ஜெயிச்சேன்" என் முகத்தில் வெற்றிப் பெருமிதம் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது.

"நீ ஜெயிச்சதுல எனக்கும் சந்தோசம் தான் " புன்னகை மாறாமல் பதில் அளித்தாள். அவள் ஒத்துக் கொண்ட சந்தோசமே போதுமானதாக இருந்தது.

" சரி எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன் " சொல்லிவிட்டு கிளம்ப முயல.

"இரு என் வீட்டுக்காரரை அறிமுகம் செஞ்சு வைக்கிறேன் " என்று அவன் அருகே அழைத்துச் சென்றாள். என் பெயரைக் கேட்டதுமே ஒரு கேள்விக்குறியுடன் அவளை நோக்க, அவளும் "ஆமாம்" என்பது போல பார்வையாலேயே பதிலளித்தாள். ஒரு ஐந்து நிமிட பேச்சிற்குப் பின்

" உங்களை மீட் பண்ணுணதுல ரொம்ப சந்தோசம். ஆபிஸ்கு டைம் ஆயிடுச்சு. அவசியம் ஒரு நாள் வீட்டிற்கு வரணும்" என்று விடை பெற்றான்.

"அவரை அனுப்பிச்சுட்டு வந்திடறேன் " என்று அவளும் கூடவே நகர்ந்தாள்.

சரி சாப்பிட செல்லலாம் என்று திரும்ப, அங்கு என் மனைவி. "யாரு அவ, ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தே? " அவள் முகம் கோபத்தில் இன்னும் சிவப்படைந்திருந்தது.

"அது வந்து..அவரு என் கூட வேலை பார்க்கிறவரு. அவங்க அவரோட மனைவி " உண்மையைச் சொன்னாள் என் நிலைமை என்ன ஆகும் என்று எனக்குத் தெரியும்.

"எதுக்கு அவரு இல்லாதப்ப அவ கூட பேசிட்டு இருந்தே? "சந்தேகப் பார்வையுடன் கேட்டாள்.

"இல்லை. அவரு எங்க இருக்காருனு விசாரிச்சிட்டு இருந்தேன் " என்று பொய்யை மெய்யாக்க முயற்சி செய்தேன்.

ஒரு நொடி என்னை உற்று நோக்கியவள் " ஆமா அதுதான் ரொம்ப முக்கியம். வீட்டுக்கு வா உன்னை வைச்சிக்கிறேன்" என்று கோபமாக நகர்ந்தாள்.

இது எனக்கு ஒன்றும் புதிது அல்ல.திருமணம் ஆன நாளில் இருந்து நாங்கள் சண்டை போடாத நாளே இல்லை. எங்களுக்குள் புரிதல் என்று ஒன்று இருந்ததே இல்லை.என் மனைவி வாசலைத் தாண்டிச் செல்லும் போது மீண்டும் அவள் என் பார்வையில் விழுந்தாள்.

"அப்பாவுக்கு டாட்டா சொல்லுடா செல்லம் " அவள் புன்னகையுடன் கை அசைக்க, அவள் கணவனும் சந்தோசமாக கையசைத்துச் செல்ல அவர்களின் அன்னியோன்யம் எனக்குள் சிறிது பொறாமையைத் தூண்டியது. என்னையும் அறியாமல் என் மனம் சொல்லியது "ஆகா என்ன பொருத்தம்!".

-முற்றும்.