செவ்வாய், 6 நவம்பர், 2018

தித்திக்கும் தீபாவளி


கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் மற்றும் அறம்  யுவா சேவா இணைந்து நடத்திய தித்திக்கும் தீபாவளி கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி சென்னை அண்ணா அரங்கில் நடைபெற்றது. சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 32 காப்பகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட  1400 குழந்தைகளுடன் கோலாகலமாக விழா நடைபெற்றது.

கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் கடந்த 2007 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி என்ற உன்னத நோக்கத்துடன் நிறுவனர் பிரியா அம்மா மற்றும் சில தன்னார்வலர்கள் முயற்சியுடன் துவங்கப்பட்டது. சமூக மற்றும் பொருளாதார தடைகளினால் கல்வியை தொடர இயலாத மாணவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகிறது. பொருளாதார உதவி மட்டும் அன்றி, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், திறமையை வெளிக் கொணரவும் சென்னையில் பல்வேறு இடங்களில் பகுதி நேர திறனுயர்வு(Grooming Center's) மையங்களை நடத்தி வருகிறது.

http://goldheartfoundation.org/index.php


தீபாவளி திருநாள் என்பது வசதி படைத்தோருக்கு மட்டும் அன்றி , ஏழை எளியோருக்கும் சமமானது. அக்குழந்தைகளும் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, கலை நிகழ்ச்சிகள் கண்டு மகிழ்ந்துருக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 2009-ஆம் ஆண்டு கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன்-ஆல் துவங்கப்பட்ட இம்முயற்சி கடந்த பத்தாண்டுகளாக எண்ணற்ற குழந்தைகளை மகிழ்வித்து வருகிறது.


காலை 7.30  மணி அளவில் பல்வேறு காப்பக குழந்தைகள் பேருந்தில் விழா நடைபெறும் சேப்பாக்கம் அண்ணா அரங்குக்கு அழைத்து வரப்பட்டனர். விழாவின் நாயக, நாயகியர்கள் மேள தாளத்துடன், பறை இசை முழங்க , ஆட்டம் பாட்டத்துடன் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர். அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டு அவர்தம் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.



குழந்தைகளை ஊக்கமூட்டவும், உற்சாகப் படுத்தவும் பல்வேறு கலைஞர்களும், திரை நட்சத்திரங்களும், சிறப்பு விருந்தினர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதில் முக்கியமாக நம் தேசம் காக்கும் முப்படை வீரர்கள் நால்வர் கலந்து கொண்டதோடு, அறம்  யுவா சேவா சார்பில் வழங்கப்பட்ட புத்தாடைகள், கேரம் போர்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை நமது குழந்தைகளுக்கு வழங்கி சிறப்பித்தனர். முப்படை வீரர்கள் முன்னிலையில் நமது மூவர்ண கொடி முதல் தளத்தில் பறக்க விடப்பட்டது நெகிழ்ச்சியான தருணம்.




ஆட்டம், பாட்டம் என கலை நிகழ்ச்சிகள் களை கட்டியது. குழந்தைகள் குதூகலமாக அவரவர் இருக்கையில் ஆட்டம் போட்டனர். கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் தன்னார்வலர்களும், உறுப்பினர்களும் குழந்தைகளுக்கும், விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறும் பணிக்கு ஆயத்தம் ஆகினர்.




மதிய உணவிற்கு பிறகு, கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது. கலந்து கொண்டு சிறப்பித்த விருந்தினர்களுக்கும், கலைஞர்களுக்கும் கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் சார்பில் நிறுவனர் பிரியா அம்மா மற்றும் அதன் உறுப்பினர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.





கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்துக்  கொண்டு இருந்த சிறுமியர்களில் சிலருக்கு மேடையில் பறை அடித்து ஆடி தங்களது திறமையைக் காட்டும் ஆர்வம் வர,
அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. கொண்டாட்டத்தின் கடைசிப் பகுதியாக  அவர்களுக்கு விருப்பமான பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஆடி மகிழ்ந்தனர்.



கை நிறைய பரிசுப் பொருட்களுடன், வாய் நிறைய புன்னகையுடன் அவர்கள் வெளியேறிய காட்சி அவர்கள் மனமும் நிறைந்து மகிழ்ந்து கொண்டாடினர் என்பதை சொல்லாமல் உணர்த்தியது. இந்த ஒரு புன்னகைக்காக உழைத்த, உதவிய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.






புதன், 22 பிப்ரவரி, 2017

உனை சந்தித்த முதல் தருணம்...

பேசி பேசிக் களைத்தும்,
மீண்டும் உன் குரல் கேட்க
வேறு என்ன பிடிக்கும் என்றேன்.

கண்கள் மலர, கைகள் விரிய
"கவிதைகளின் காதலி" என்றாய்!

சிறகடித்துப் பறந்த இதயம்
கிறுக்கவும்  விழைந்தது.

ஒரு சுப வேளையில்,
"அழகான பெண்ணே" என
பிள்ளையார் சுழி கூட போட்டது!

அடுத்த வரி???
யோசித்து யோசித்துப்
பார்த்தும் முடியாமல்,
"அழகான பெண்ணே!"
என ஆச்சர்யக் குறியுடன்
முடித்தது.

 உன்னில் கிறங்கிக்
கிடந்த கிறுக்கனுக்கு
கிறுக்கக் கூட தெரியவில்லை.

பல வருடங்கள் கடந்து
வந்த பின்பு,

நினைவுகளில் மூழ்கி
முத்தெடுத்துக் கொண்டு
இருந்த போது,
முள்ளாய் குத்தியது நான்
விட்டு வைத்த மிச்சம்!

முதல் வரியை
மீண்டும் மீண்டும்
முறைத்தேன்.

"அழகான பெண்ணே!",
"அழகான பெண்ணே!",
"அழகான பெண்ணே!",

அடுத்த வரிக்கு
முயன்று முயன்று
மீண்டும் தோற்றேன்.

காகிதத்தை கசக்கி
எறிந்து விட்டு
சிரிப்புடன் எழுந்தேன்.

"பெண் என்றாலே அழகுதானே!"
என்று அதற்குள் நீ எனக்கு
புரிய வைத்து விட்டதாலோ
என்னவோ!!!



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வாராயோ தோழி - பாகம் 2

அடுத்த நாள் காலை, கார் பார்க்கிங்கில் நானும் சந்துருவும் காத்திருக்கையில் சவியும், அர்ச்சனாவும் காரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

"அம்மா தாயே, ரெடி ஆக இவ்வளவு நேரமா? " சந்துரு இருவரையும் பார்த்து கேட்டான்.

நான் சந்துருவிடம் திரும்பி, "இந்த பொண்ணுக மேக்கப் போட்டு முடிக்கிற நேரத்துல, ஒரு 20-20 கிரிக்கெட் மாட்சே நடத்தி முடிச்சிடலாம் மச்சி" என்று சொல்ல, அவன் சிரித்துக் கொண்டு Hive-Five செய்ய கை உயர்த்தினான்.

"நான் சீக்கிரம் ரெடி ஆயிட்டேன். அர்ச்சனா தான் லேட் பண்ணிட்டா" என்று சவி சொல்ல, சந்துருவிடம் High-five செய்ய உயர்த்திய கையை உடனே பின் வாங்கினேன்.

அப்போது காரின் பின் சீட்டில் இருந்த அர்ச்சனா கட் செய்த ஆப்பிளை சந்த்ருவிற்கு கொடுத்து விட்டு, எனக்கும்  ஒரு சிறு புன்னகையுடன் நீட்டினாள். அதைப் புன்னகையுடன் நான் வாங்க,

"பார்ரா, டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இந்த டிரிப்ல அடிச்சுகுவாங்கனு பார்த்தா, இப்பவே ரெண்டும் சமரசம் ஆயிடிச்சு " - சவி கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

"அர்ச்சனா, அவனுக்கு ஆப்பிள் கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு நிமிசம் உன் அழகான ப்ளூ கலர் சிவிக் காரை நினைச்சுப் பாரு. அவன் உன் காரை காணாம போக வைச்ச துரோகி"  ஒரு எக்ஸ்ட்ரா ஆப்பிள்காக சந்துரு அவனது பரட்டை வேலையை ஆரம்பித்தான்.

"இப்படி எல்லாம் பேசி என் கிட்ட நீ ஆப்பிள் வாங்க முடியாது. கார் போனா போகட்டும். அவன் என்ன வேணும்னா பண்ணினான்? நான் தான் நேத்து கொஞ்சம் ஒவரா ரியாக்ட் பண்ணிட்டேன். சாரி தியாகு" அர்ச்சனா சொன்னதைக் கேட்டதும் என் முகத்தில் 1000 வாட்ஸ் புன்னகை ஒளிறியது.

"ரைட்டு நீங்க ரெண்டு பேரும் முஸ்தபா ஆயிட்டீங்க. இந்த சந்தோசத்தை நாம ஆப்பிள் வெட்டிக் கொண்டாடலாம்"  என்று சந்த்ரு உற்சாகமாகக் கூறினான்.

அதற்கு சவி, "சுத்தி சுத்தி ஆப்பிள்லயே குறியா இருக்கான் பாரு. ஆனா ஆப்பிள் முடிஞ்சு போச்சு.உன் பேட் லக் " என்றாள்.

" மச்சி பொண்ணுக கிட்ட ஆப்பிள் போனாலே பிரச்சனை தான்.  ஆதாம் ஏவாள் காலத்துல ஆரமிச்ச ஆப்பிள் பிரச்சனை இன்னைக்கு வரைக்கும் முடியலை பாரு. இந்த மாதிரி பிரச்சனை வரும்னு தான் நானும் கொஞ்சம் எடுத்து வைச்சிருக்கேன். என் பேக்ல இருக்கும் பாரு " என்று நான் சொல்ல அர்ச்சனா எனது பேக்-ஐ ஆப்பிள் எடுக்க திறந்தாள்.

"வாவ். ஒரு ஃப்ருட் ஸ்டாலே உன் பேக்ல இருக்கும் போல!!! " உள்ளே இருந்த பழங்களைப் பார்த்ததும் அர்ச்சனா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

" கூடவே ஒரு பேக்கரியும் இருக்கும் பாரு. காலைல இவன் ஹோட்டல்ல இருந்து எடுத்த ஐட்டத்தை மட்டும் யாராவது பார்த்திருந்தா, ஃப்ரீ பிரேக்ஃபாஸ்ட்னு இனி எந்த ஹோட்டல்லயும் போர்ட் வைக்க மாட்டான் " சந்துரு கிண்டலாகக் கூற அனைவரும் சிரித்தனர்.

அர்ச்சனா என்னை ஒரு கேள்விக் குறியுடன் நோக்க, " இன்னைக்கு சவி விரதம். அவ ஈவ்னிங் தான் சாப்பிடுவா. நாம போற எடத்துல ஏதாச்சும் கிடைக்குமானு தெரியாது. அதனால தான் அவளுக்காக எடுத்து வைச்சு இருக்கேன் " என்று கூறினேன்.

"எப்பவும் போல, யூ ஆர் சோ ஸ்வீட் தியாகு " என்று சவி சொல்ல என்  ரியர்  வியூ மிரரில் என் பார்வைப் பதிந்தது. அதில் அர்ச்சனா  என்னையே  பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் என் மனம் துள்ளியது.  அவள் பார்வையில் இருந்த வித்தியாசத்தை நான் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்த அரை மணி நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் அனைவரும் காரில் இருந்து இறங்கி ஃபெர்ரியில்(Ferry) ஏறினோம். சின்ன சின்னத் தீவுகளாக அங்கு ஆயிரக்கணக்கான தீவுகள் இருக்க அந்த ஃபெர்ரியின் கேப்டன் சில முக்கியத் தீவுகளின் பெயரையும், அதன் வரலாறையும் அறிவித்துக் கொண்டே செல்ல, சவியும், அர்ச்சனாவும்  ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர். சந்துரு வழக்கம் போல அங்கு இருந்த அமெரிக்கப் பெண் குட்டிகளிடம் பீட்டர் விட்டுக் கொண்டிருக்க, நான் ஒரு மூலையில் நின்று அமைதியாக இயற்கை அழகில் ஒன்றிக் கொண்டு இருந்தேன்.

" என்ன மெர்மெய்ட் ஏதாச்சும் தெரியுதா? தனியாப் பார்த்து ரசிச்சுட்டு இருக்கே? "  குரல் கேட்டு திரும்பினேன். காற்றில் கட்டுப்பாடன்றி கலைந்து பறந்து கொண்டிருந்த கூந்தலை ஒரு கையால் சரி செய்தவாறே என்னை நோக்கி அர்ச்சனா வந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்து விட்டு அவளை நோக்கி திரும்பி நின்றேன்.

எனக்கு அருகில் வந்து நின்ற அவளைப் பார்த்து "என்ன ஃபோட்டோ செசன் எல்லாம் முடிஞ்சிச்சா? " என்றேன்.

"இன்னும் நிறைய மிச்சம் இருக்கு. ஃபேஸ்புக்-க்கு ஒரு நல்ல ப்ரொபைல் பிக்சர் கிடைக்கற வரை எடுத்துத் தள்ளிட்டே இருப்போம்ல" என்று சிரித்தவாறே கூறினாள்.

"எடுக்கற ஃபோட்டோஸ் லாம் பார்த்தா ஃபேஸ்புக்-க்கு எடுக்கற  மாதிரி  தெரியலையே, மேட்ரிமோனியல்-க்கு எடுக்கற மாதிரி இல்லை இருக்கு" அவளை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தேன்.

"என்னைப் பார்த்தா உனக்கு அப்பா அம்மாக்கு அந்த வேலை லாம்  வைக்கிற பொண்ணு மாதிரியா தெரியுது? " ஒரு குறும்புடன் கேட்டாள்.

"ஓ கதை அப்படிப் போகுதா? ஆள் எல்லாம் ஆல்ரெடி ரெடியா? " என்று கேட்டேன். அவள் "நோ" என்று பதில் சொல்ல வேண்டும் என்று அந்த நொடியில் மனதில் தோன்றிய அனைத்து தெய்வத்தையும் வேண்டினேன்.

"அது எல்லாம் எப்பவோ ரெடி. ஆனா ஒரு சின்ன பிரச்சனை அது முடிஞ்சதும் சீக்கிரம் கல்யாணம் தான்" என்றாள்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் என் மனதில் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்து விட்டு, " என்ன அவங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டீங்கறாங்களா? அட்ரஸ் சொல்லு அவனை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்" என்றேன்.

"அம்மா, அப்பா பிரச்சனை இல்லை. அவன் வொய்ஃப் ஜோதிகா தான் பிரச்சனை. அவளை உன்னால முடிஞ்சா தூக்கிடு" என்றவாறே சிரிக்க, அவளுடன் நானும் சேர்ந்து சிரித்தேன்.

"அதுதான் அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு இல்லை. இன்னும் அவனை விட மாட்டீங்களா? அப்படி என்ன தான் அவன் கிட்ட இருக்கு? பொண்ணுகளுக்கு  தமிழ் நாட்டுல வேற யாரையுமே கண்ணுக்கு தெரியாதா? " என்று அனைத்து தமிழ் ஆண்கள் மனதில் இருக்கும் அந்த கேள்வியைக் கேட்டேன்.

"அந்த கண்ணு ஒண்ணே போதும் எத்தனை வருசம் ஆனாலும் அவன் பின்னாடி அலைய வைக்க. அதுவும் இல்லாம அவனோட சிக்ஸ் பேக்..ஓ வாவ். அந்த மாதிரி சிக்ஸ் பேக் வைச்சு இருக்கிறவன் ஒருத்தனாப் பார்த்து தான் லவ் பண்ண போறேன். " என்றாள்.

"இந்த சூர்யா ஒருத்தனால தமிழ் நாட்டுல எத்தனை பையனுகளுக்கு பிரச்சனை" என்று அவனை மனதிற்குள் எல்லா கெட்ட வார்த்தைகளாலும் திட்ட ஆரம்பித்தேன். அதே சமயம் அவளுக்கு பாய் பிரெண்ட் யாரும் இல்லை என்று அறிந்ததில் சிறிது சந்தோசம் அடைந்தேன்.

"சார் எப்படி, அப்பா அம்மாக்கு வேலை வைக்கிற ஐடியா இருக்கா? இல்லை ஆல்ரெடி ஆள் பார்த்தாச்சா" என்று என்னைத் திரும்பக் கேட்டாள்.

"அப்பா அம்மா பார்க்கிறது எல்லாம் போன தலைமுறையோட போச்சு. ஒரு பொண்ணைப் பார்த்து பேசி, மயங்கி கிறங்கணும், அவ பின்னாடியே அலை அலைனு அலையணும், அவ இல்லைனா உலகமே இல்லைனு தோணனும். அப்படி ஒரு பொண்ணுக்காகத் தான் வெயிட்டிங்" என்று பதிலளித்தேன்..

சில நொடிகள் இடைவெளி விட்டு, "ஆனா சீக்கிரம் அப்படி ஒரு பொண்ணைப் பார்த்துடுவேனு நம்பிக்கை வந்துருச்சு" என்று அவள் கண்களைப் பார்த்தாவாறே சொன்னேன்.

என்னை சில நொடிகள் பார்த்தவள், என்னை நோக்கி இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள். என் காதருகே வந்து, " நானும் டும் டும் டும் படம் பார்த்துட்டேன். வேற ஏதாச்சும் டயலாக் சொல்லு"  என்று சொல்ல, அதற்கு இருவரும் இணைந்து சிரித்தோம். எங்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி உருவாகிக் கொண்டு இருந்தது.

அப்போது எங்களை நோக்கி வந்த சவி, " ஹே, எனக்கு இந்த லொக்கேசன் பேக் ரவுண்ட்ல ஒரு போட்டோ எடுத்துக் கொடு" என்று கேமராவை என் கையில் கொடுத்து விட்டு போஸ் கொடுத்து நின்றாள்.

அவளுக்கு போட்டோவை எடுத்து விட்டு, அந்த படத்தைப் பார்த்த நான், " ஒரு மொக்கை கேமரா வைச்சு இருக்கே நீ. இவ்வளவு கேவலமான கேமராவை நான் பார்த்ததே இல்லை. கொஞ்சம் கூட க்ளாரிட்டியே இல்லை. ஜூமும் சரி இல்லை. எங்கே குப்பைத் தொட்டில இருந்து எடுத்தியா இதை? " என்று கிண்டல் பண்ண.

எனக்கு அருகில் இருந்த அர்ச்சனா என் கையில் இருந்த கேமராவைப் பிடுங்கி விட்டு கோபமாக நகர்ந்தாள். எதுவும் புரியாமல் நான் சவியைப் பார்க்க

"அது அவ கேமராடா " என்று என்னிடம் சொல்லிவிட்டு அர்ச்சனாவை நோக்கி சவி நடந்தாள்.

" உனக்கு வேற எதிரி யாருமே வேண்டாம். உன் வாய் ஒண்ணே போதும். ஓட்டை வாய்டா தியாகு உனக்கு" என்று என் மனசாட்சி என்னைத் திட்ட, கோபமாகப் போகும் அர்ச்சனாவைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

-தொடரும்.



செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வாராயோ தோழி - பாகம் 1

"வந்துட்டேன் சவி சிக்னல்-ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் 2 நிமிசத்துல உன் வீட்டுல இருப்பேன்." - பேசிக் கொண்டு இருக்கும் போது கிரீன் சிக்னல் விழ ஃபோனை அணைத்து விட்டு சவிதாவின் வீட்டை நோக்கி எனது காரை செலுத்தினேன். அவள் வீட்டுக்கு செல்லும் இரண்டு நிமிடத்தில் என்னைப் பற்றி,

நான் தியாகு, இன்று உங்களது அமெரிக்க நண்பர் யாரேனும் ஒருவருடன் நீங்கள் போனில் பேசி இருந்தால் அதற்கு காரணம் நானும் ஒருவன். அமெரிக்காவின் முண்ணனி தொலை தொடர்பு அலுவகத்தில் முக்கிய பணி ஆற்றிக் கொண்டு இருக்கிறேன். இதோ இன்றோடு நான் அமெரிக்கா வந்து 3 வருடம் ஆகிறது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க நண்பர்களுடன் ஒரு ட்ரிப் அடிக்கலாம் என முடிவு செய்து இப்போது எனது நெருங்கிய தோழி சவிதாவை அழைக்க சென்று கொண்டு இருக்கிறேன்.

"தியாகு என்ன அதிசயம்! உண்மையாவே சொன்ன நேரத்துக்கு வந்துட்டே? " ஆச்சர்யத்துடன் என்னை சவி வரவேற்றாள்.

"இந்த முணு நாள்ல இன்னும் நிறைய ஆச்சர்யபடுற மாதிரி நடக்கும். கண்டுக்காதே ". அவளுக்கு ஒரு சிரிப்புடன் பதில் அளித்து விட்டு எனது கண்கள் அவளது  வீட்டுக்குள் யாரையோ தேடியது.

" நீ தேடற ஆள் இங்கே இல்லை. அவ Washingdon DC போயிட்டா." சவி எனது தேடலைப் புரிந்து பதில் அளித்தாள்.

"வாட்??? அவ நம்ம கூட Thousand Islands வரானு நீதானே நேத்து நைட் சொன்னே? "

"ஆமா, இன்னைக்கு காலைல ப்ளான் மாறிடிச்சு. அவ White House பார்த்ததே இல்லையாம். ஒரு குரூப் Washington போறாங்க. அவங்களோட அவ ஜாயின் பண்ணிக்கிட்டா"  இதைக் கேட்டதும் எனது முகம் சிறிது வாடியது. அதற்கு காரணம் அர்ச்சனா!!!.

அர்ச்சனா, எங்கள் டீமில் உள்ள அனைவரும்  கடலைப்  போடத்  துடித்துக்  கொண்டு  இருக்கும் அழகிய புது வரவு. எனது நல்ல நேரம் அவள்  சவியின்  ரூம் மேட் ஆக, என்னுடைய தொந்தரவு தாங்க முடியாமல் அர்ச்சனாவையும் இந்த டிரிப்பிற்கு அழைத்திருந்தாள் சவி. இந்த ட்ரிப்பில் அவளை இம்ப்ரெஸ் செய்து நெருங்கி விடலாம். பார்க்கறவன்   ஒவ்வொருத்தன்  வயித்துலயும்  புகையை கிளப்பலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தில் விழுந்த மண்ணினால் தான் என் முகம் வாடியது.

அப்போது கையில் ஒரு ஷாப்பிங் பேக் உடன் உள்ளே நுழைந்தாள் அர்ச்சனா. " சாரி சவி, கொஞ்சம் லேட் ஆயிடிச்சு, இதோ ரெண்டு நிமிசத்துல வந்திடறேன்" அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

சவி, "பரவாயில்லை, இன்னும் டைம் இருக்கு. பை தி வே, இது தியாகு, என்னோட பெஸ்ட் ப்ரண்ட்" என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.

"ஹலோ, நைஸ் டூ மீட் யூ" என்று கை குலுக்கினாள்.

"Pleasure" என்று நானும் கை குலுக்கினேன். அர்ச்சனா அவள் ரூம் உள்ளே நுழையும் வரைக் காத்து இருந்து விட்டு

"ஏய் லூசு, எதுக்கு பொய் சொன்னே?" என்று சவியின் தலையில் குட்டினேன்.

" வலிக்குதுடா பக்கி " என்று என் கையில் ஒரு குத்து விட்டவாறே  "ஆனாலும் அவ வரலைனு சொன்னதும் உன் மூஞ்சி போன போக்கை பார்த்து இருக்கணுமே" என்னை கிண்டல் செய்தாள் சவி.

அடுத்த 5 நிமிடத்துல அர்ச்சனா ரெடியாக, எனது இன்னொரு நண்பன் சந்துரு என்னை கால் பண்ணவும் சரியாக இருந்தது. அவனுடைய காரில் ட்ரிப் போவதாகத் தான் பிளான். அவன் கார் திடீரென ஸ்டார்ட் ஆகவில்லை என்றும் மெக்கானிக் ஷாப்பில் இருப்பதாக சொன்னான். எனது கார் வாங்கி இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதனால் எனது காரில் போக எனக்கு விருப்பமில்லை. அர்ச்சனா தான் அவளது கார் Rental கார் எனவும் அதனால் அவளது காரில் போகலாம் என்றும் சொன்னாள். நான் சந்துருவை வழியில் பிக்கப் பண்ணிக்குவதாக ஃபோன் செய்து சொல்லிவிட்டு நாங்கள் மூணு பேரும் கிளம்பினோம்.

"வாவ், Honda Civic. அர்ச்சனா, intermediate Class Rental a? " என்று கேட்டேன்.

"இல்லை, இது Economy class Rental தான். ஆனா என்னோட லக், அந்த டைம்ல Economy car  எதுவும் இல்லைனு எனக்கு இது கொடுத்தாங்க" என்று பெருமையாக அர்ச்சனா கூறினாள்.

நான், "உண்மையாவே நீ லக்கி தான். பொதுவா Nissan Versa னு ஒரு டப்பா கார் தான் கிடைக்கும்"

"ஓ, எனக்கு Nissan Versa பிடிக்கவே பிடிக்காது. அதை ஓட்டறதுக்கு நான் நடந்தே போவேன்." என்றாள்.

இதற்குள் சந்துரு இருக்கும் மெக்கானிக் ஷாப் வர, காரை நிறுத்தி அவனையும் ஏற்றிக் கொண்டு எங்களது ட்ரிப்பை இனிதே துவங்கினோம்.

"மச்சி, இப்போ தான் நியூ சாங்க்ஸ் எல்லாம் என் ஐ-பாட் ல போட்டு இருக்கேன். இந்த ட்ரிப் பூரா கும் கும்னு பாட்டு கேக்கலாம்" என சந்தோசமாக தனது ஐ-பாட் ஐ வெளியே எடுத்தான்.

"என் கார்-ல FM தவிர வேற எதுவும் வொர்க் ஆகாது " என்று அர்ச்சனா குண்டைத் தூக்கிப் போட்டாள்.

அதற்கு சவி, "என்னது? மூணு நாள் ட்ரிப் நம்ம தமிழ் பாட்டு கேக்காமயா? சான்சே இல்லை "  என்றாள்.

"ஆமாம், FM நம்பி எல்லாம் ட்ரிப் போக முடியாது. நாம ரெண்டல் ஆபிஸ்  போயி கார் மாத்திட்டு போயிடலாம்" என்றேன்.

"வேண்டாம், அங்க போனா எனக்கு மறுபடி சிவிக் கிடைக்காது. எனக்கு இந்த கார் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று அர்ச்சனா மறுத்தாள்.

"அர்ச்சனா, நீ என் பவர் தெரியாம பேசறே. நான் Hertz -ல Platinum Member. நான் போனா அந்த மேனேஜர் எந்திருச்சி நின்னு தான் பேசுவார். அந்த அளவுக்கு என் மேல அவருக்கு மரியாதை. கவலைப் படாதே, உனக்கு இதை விட நல்ல காரா வாங்கித் தரேன்" என்று பந்தாவாக பேசி வண்டியை ஹெர்ட்ஸ் ரெண்டல் ஆபிஸ்-க்கு திருப்பினேன்.

ஒரு மணி நேரம் கழித்து எங்களது காரில், "வொய் திஸ் கொலைவெறி" என்று பாடல் ஒலிக்க சந்துருவும், சவியும் சந்தோசமாக கூட சேர்ந்து பாடிக் கொண்டு இருந்தனர். நான் அமைதியாக வண்டி ஓட்ட, அர்ச்சனா என்னை கோபமாக முறைத்துக் கொண்டு இருந்தாள். காரணம் நாங்கள் இப்போது இருப்பது "Nissan Versa" கார்!

"மச்சி, என்ன சொன்னே, அந்த மானேஜர் நின்னுட்டு தான் பேசுவாரா? அப்ப உன்னை ஆபிஸ்-க்கு உள்ள நிக்க கூட விடாம நாய் விட்டுத் துரத்துனது யாருடா? " - சந்துரு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுனான்.

"சரி ஃப்ரீயா விடு மச்சி, அந்த மானேஜர் விட்ட டோஸ்ல அவனே நொந்து நூடுல்ஸ் ஆயிப் போயி இருக்கான்.  " - சவி எனக்கு சப்போர்ட் ஆகப் பேசினாள்.

அதற்கு சந்துரு, "அதெல்லாம் சரி, நடுவில அந்த ஆளு, IBM Employee இல்லை சாம் ஆண்டர்சன் வந்து கேட்டாலும் இந்த காரைத் தான் தருவேனு சொன்னானே. சாம் ஆண்டர்சன் அமெரிக்கா அளவுல ஃபேமஸ் ஆயிட்டானா? " என்று கேட்டான்.

"அடப்பாவி, சாம் ஆண்டர்சன் இல்லைடா, அவரு சாம் பால்மிசானோ-னு சொன்னாரு. அவரு தான் நம்ம கம்பெனியோட CEO" என்று சொல்ல இருவரும் சிரித்தனர். அப்போது நானும், அர்ச்சனாவும் அமைதியாக இருக்க

சவி, " கம் ஆன் கைய்ஸ், இப்படி நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருந்தா நாம ட்ரிப் போறோமா? இல்லை அன்னா ஹசாரே போராட்டத்துக்கு போறோமானு எனக்கு சந்தேகமா இருக்கு? " என்றாள்.

நான் அர்ச்சனாவிடம் திரும்பி, " சாரி அர்ச்சனா" என்றேன். அதற்கு அவள் பதில் அளிக்காமல் அவள் முகத்தை திருப்பி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஆரம்பமே இப்படி என்றாள், இந்த ட்ரிப் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்துடன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.

-தொடரும்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

ஆகா என்ன பொருத்தம்!!!

"கெட்டி மேளம், கெட்டி மேளம் " ஐயர் உரக்கச் சொல்ல, சுற்றியிருந்த உற்றார், உறவினர் பூக்கள் தூவி வாழ்த்த, நாதஸ்வர நாதமும், மத்தள இசையும் மங்களகரமாக ஒலிக்க, பெற்றோர் கண்களை ஆனந்த கண்ணீர் நிறைக்க, இருவர் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயம் இனிதே துவங்கிய து. அதுவரை பொறுமை காத்த ஒரு சிலரும் பந்தியை நோக்கி நகர, எனக்கு இரண்டு வரிசை முன்னால் அமர்ந்திருந்த அவள் என் பார்வையில் விழுந்தாள்.

"ஒரு வேளை அவளாக இருப்பாளோ? " கூட்டத்தில் சரியாகத் தெரியவில்லை. இரண்டு நிமிட காத்திருப்பிற்குப் பின் புன்னகையுடன் திரும்பிய அவளைப் பார்த்ததும் என் மனதிற்குள் ஒரு இனம் புரியா குறுகுறுப்பு. கல்லூரியில் பார்த்த போது இருந்ததை விட இன்னும் கொஞ்சம் அழகும், பொலுவும் கூடி இருந்தது போலத் தோன்றியது. நெற்றி வகிட்டில் இருந்த குங்குமமும், தடிமனான தங்கச் சங்கிலியும் அவள் இன்னொருவனுக்குச் சொந்தம் ஆகி விட்டதை உறுதி செய்தது. அவளுடன் சென்று பேசலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

அப்போது அவளை நோக்கி சென்ற ஒருவன் தன் கையில் இருந்த கைக்குழந்தையை நீட்ட, "வாடா செல்லம்...அம்மாவை விட்டுட்டு இருக்க முடியலையா என் தங்கத்தாலே?" என்றவாறே வாங்கி முத்தமிட்டாள்.

அவனிடம், " என்னங்க நான் அப்பாவோட சாப்பிட்டுக்கிறேன். உங்களுக்கு டைம் ஆயிடுச்சு இல்ல. நீங்க சாப்பிட்டு கிளம்புங்க " என்றவாறே அவனது தலையிலும் விழுந்திருந்த சிறு பூக்களைத் தட்டி விட்டாள். அப்படி என்றால் அவன் தான் அவள் கணவனா? என்னால் நம்பவே முடியவில்லை. கரு கருவென்று, கன்னங்கள் ஒட்டிப் போய், அவளது நிறத்திற்கும் அழகிற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தான்.

"என்னங்க பந்திக்கு கூட்டம் அதிகமாகுது. நாமளும் போயி சாப்பிடலாமா? " கேட்ட என் மனைவியைத் திரும்பிப் பார்த்தேன். மகாலட்சுமி போல மங்களகரமான தோற்றத்துடன் பட்டுப் புடவையும், தங்க நகைகளும் அவளது அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற, தங்க விக்கிரகம் போல ஜொலித்தாள். இப்படி ஒரு அழகி எனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணி என்றும் போல இன்றும் பெருமிதத்தில் என் முகத்தில் புன்னகை பூத்தது.

"நீ உன் அம்மாவோட போ. நான் பின்னாடி வரேன் " என்று என் துணையை அனுப்பி விட்டு அவளை நோக்கி நகர்ந்தேன். குழந்தையைக் கொஞ்சி கொண்டு இருந்த அவள் என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டாள்.

ஆச்சர்யத்தில் கண்கள் விரிய, " வாவ் வாட் எ சர்ப்ரைஸ்!. உன்னை இங்க பார்ப்பேனு நினைச்சு கூடப் பார்க்கலை. எப்படி இருக்கே? " என்று நலம் விசாரித்தாள்.

"நான் நல்லா இருக்கேன். எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு. நாம கடைசியா பார்த்து ஒரு 5 வருசம் இருக்குமா? " என்று கேட்டேன்.

"இவனுக்கே 5 வயசு ஆச்சு. அதுக்கு முன்னாடி ரெண்டு. ஏழு வருசம் ஆச்சு " என்றாள்.

"காலம் எவ்வளவு வேகமா ஓடுதுனு பார்த்தியா? நேத்து தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு  அதுக்குள்ள..." என்று வியந்தேன்.

"ஆமா...அப்புறம் வீட்டிலிருந்து வந்திருக்காங்களா? " என் பின்னால் அவள் கண்கள் தேடியது.

"அதோ அந்த மெரூன் கலர் புடவை கட்டிட்டு ரெண்டாவது டேபிள்ல இருக்கா பாரு. அவதான் " நான் கை காட்டிய இடத்தில் பார்த்த அவள்,

"வாவ்..ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்காங்க. உனக்கு ஏத்த ஜோடியா தான் பார்த்து இருக்க" என்று பாராட்டினாள்.

"அதோ அங்க நீல சட்டை போட்டுட்டு ஜாமூன் சாப்பிட்டுட்டு இருக்காரே, அவர் தான் என் வீட்டுக்காரர் " அவள் காட்டிய திசையில் அவனே தான்.

"சொல்றேனு தப்பா எடுத்துக்காதே. உன் அழகுக்கு எவ்வளவு பேரு நீ, நான்-னு போட்டி போட்டுட்டு வந்திருப்பாங்க. உனக்கு எந்த  விதத்திலயும்  பொருத்தமே  இல்லாத தப்பான ஆளைத் தேர்ந்தெடுத்திட்ட" என்று நான் சொல்ல புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

"ஆனா ஒண்ணு, அன்னைக்கு நான் உன்கிட்ட சவால் விட்ட மாதிரியே உன்னை விட அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுன நான் தான் ஜெயிச்சேன்" என் முகத்தில் வெற்றிப் பெருமிதம் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது.

"நீ ஜெயிச்சதுல எனக்கும் சந்தோசம் தான் " புன்னகை மாறாமல் பதில் அளித்தாள். அவள் ஒத்துக் கொண்ட சந்தோசமே போதுமானதாக இருந்தது.

" சரி எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன் " சொல்லிவிட்டு கிளம்ப முயல.

"இரு என் வீட்டுக்காரரை அறிமுகம் செஞ்சு வைக்கிறேன் " என்று அவன் அருகே அழைத்துச் சென்றாள். என் பெயரைக் கேட்டதுமே ஒரு கேள்விக்குறியுடன் அவளை நோக்க, அவளும் "ஆமாம்" என்பது போல பார்வையாலேயே பதிலளித்தாள். ஒரு ஐந்து நிமிட பேச்சிற்குப் பின்

" உங்களை மீட் பண்ணுணதுல ரொம்ப சந்தோசம். ஆபிஸ்கு டைம் ஆயிடுச்சு. அவசியம் ஒரு நாள் வீட்டிற்கு வரணும்" என்று விடை பெற்றான்.

"அவரை அனுப்பிச்சுட்டு வந்திடறேன் " என்று அவளும் கூடவே நகர்ந்தாள்.

சரி சாப்பிட செல்லலாம் என்று திரும்ப, அங்கு என் மனைவி. "யாரு அவ, ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தே? " அவள் முகம் கோபத்தில் இன்னும் சிவப்படைந்திருந்தது.

"அது வந்து..அவரு என் கூட வேலை பார்க்கிறவரு. அவங்க அவரோட மனைவி " உண்மையைச் சொன்னாள் என் நிலைமை என்ன ஆகும் என்று எனக்குத் தெரியும்.

"எதுக்கு அவரு இல்லாதப்ப அவ கூட பேசிட்டு இருந்தே? "சந்தேகப் பார்வையுடன் கேட்டாள்.

"இல்லை. அவரு எங்க இருக்காருனு விசாரிச்சிட்டு இருந்தேன் " என்று பொய்யை மெய்யாக்க முயற்சி செய்தேன்.

ஒரு நொடி என்னை உற்று நோக்கியவள் " ஆமா அதுதான் ரொம்ப முக்கியம். வீட்டுக்கு வா உன்னை வைச்சிக்கிறேன்" என்று கோபமாக நகர்ந்தாள்.

இது எனக்கு ஒன்றும் புதிது அல்ல.திருமணம் ஆன நாளில் இருந்து நாங்கள் சண்டை போடாத நாளே இல்லை. எங்களுக்குள் புரிதல் என்று ஒன்று இருந்ததே இல்லை.என் மனைவி வாசலைத் தாண்டிச் செல்லும் போது மீண்டும் அவள் என் பார்வையில் விழுந்தாள்.

"அப்பாவுக்கு டாட்டா சொல்லுடா செல்லம் " அவள் புன்னகையுடன் கை அசைக்க, அவள் கணவனும் சந்தோசமாக கையசைத்துச் செல்ல அவர்களின் அன்னியோன்யம் எனக்குள் சிறிது பொறாமையைத் தூண்டியது. என்னையும் அறியாமல் என் மனம் சொல்லியது "ஆகா என்ன பொருத்தம்!".

-முற்றும்.



திங்கள், 16 ஜூலை, 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 6 (முடிவுற்றது)



பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் - 4பாகம் - 5

அன்று இரவும் வழக்கம் போல எனது கணினியுடன் எனது நேரத்தை பங்கிட்டுக் கொண்டு இருந்தேன்..அதன் திரைகளில், 

மாலை நானும் ஜென்னியும் ஜூஸ் குடித்துக் கொண்டு இருந்தோம். அவள் பேசுவாள் என்று நானும், நான் தொடங்கட்டும் என்று அவளும் காத்திருக்க

"இப்போ சொல்லு ஜென்னி" அங்கு நிலவிய மொளனத்தை கலைத்தேன்.

ஒரு நிமிடம் யோசித்த ஜென்னி, "சூரி எப்படி சொல்றதுனு தெரியலை, உன்னை பார்த்த நாள்ல இருந்தே எனக்கும் உன்னை பிடிச்சது.நீ முதல் முதலா என் கையைப் பிடிச்சப்ப எனக்குள்ள ஒரு ஷாக் அடிச்ச மாதிரி இருந்திச்சு. ஏதோ பல ஜென்ம தொடர்பு மாதிரி ஃபீலிங்(அதே மகதீரா எஃபெக்ட் தான்).ஆனா, நமக்குள்ள எந்த அளவுக்கு ஒத்து வரும்னு தெரியலை"

நான், "புரியலை ஜென்னி, உனக்கும் பிடிச்சிருக்குனு சொல்றே, ஆனா ஒத்து வராதுனும் சொல்றே. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு ஜென்னி" என்றேன்.

ஜென்னி தொடர்ந்தாள், "சூரி, நான் மத்த பொண்ணுகள்ள இருந்து ரொம்பவே வித்தியாசம் ஆனவ. பொண்ணுகனா இப்படித்தான் இருக்கனும் அப்படினு கட்டம், வட்டம் லாம் போட்டு வாழற வாழ்க்கை எனக்கு பிடிக்காது. அடுத்த நிமிஷம் நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது, ஐ யம் வெரி அன்ப்ரெடிக்டபிள் "

உடனே நான், "ஜென்னி, அதனால தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு"

அதற்கு ஜென்னி சிரித்துக் கொண்டே, "எல்லா ஆம்பிளைகளும், முதல்ல அப்படித் தான்டா சொல்வீங்க, கொஞ்ச நாள்ல மாறிடுவீங்க". நான் புன்னகையை மட்டும் பதிலாக அளித்தேன்.

அவளே தொடர்ந்தாள், "நான் சீக்கிரம் போர் அடிச்சிடுவேன் சூரி, இவளை ஏண்டா லவ் பண்ணுனோம்னு தோணும் உனக்கு..அதுவும் இல்லாம"

அவள் அடுத்த வார்த்தையை உதிர்ப்பதற்க்கு முன் ஜென்னியின் கைகளைப் பற்றினேன்.. அவள் கண்களை நேராக பார்த்து, "ஜென்னி அடுத்த நிமிசம் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. இந்த நிமிசம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னோட பேசற ஒவ்வொரு நிமிசமும் நான் ஏதோ புதுசா பிறந்த மாதிரி ஃபீல் பண்றேன். உன் கையைப் பிடிச்சிட்டு இருக்கிற ஒவ்வொரு நொடியும், அந்த நொடியோட உலகம் அப்படியே உறைஞ்சு போயிடக் கூடாதோனு தோணுது. நீ எனக்காக பிறந்தவனு உன்னைப் பார்த்த நாள்ல இருந்தே எனக்கு தோணிட்டு இருக்கு ஜென்னி. உனக்கும் அதே மாதிரி தோணுச்சினா என் காதலை ஏத்துக்கோ. Lets not worry about the destination, We will just enjoy our journey together. இது எங்க போய் முடியுதோ அங்க முடியட்டும்" என்றேன்.

அவளது கண்கள் கலங்கியது. ஆனால் உதடுகள் சிரித்தன. அதுவே அவளூக்கு சம்மதம் என உணர்த்தியது. பொது இடம் என்பதை மறந்து எனது தோளில் அப்படியே சாய்ந்தாள்.

உடனே நான், "ஜென்னி இந்த நாளை நாம் கொண்டாடனும், உனக்கு என்ன வேனும்னு சொல்லு" என்றேன்.

அவள், சிரித்துக் கொண்டே "உலகத்துல விலை மதிக்க முடியாத சொத்து நீயே எனக்கு கிடைச்சிருக்கே, எனக்கு வேற என்ன வேண்டும்.வாழ் நாள் பூரா சந்தோசமா இப்படியே இருந்தா போதும்"

நான் பெருமையுடன் அவளை பார்க்க, ஒரு நொடி இடைவெளி விட்டு "அப்படீனு டயலாக் அடிப்பேனு நினைக்காதே, உன் க்ரேடிட் கார்டுக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை வைப்போம் வா" என்று அருகில் இருந்த கடைக்கு அழைத்து சென்றாள்.

படித்து விட்டு எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை. எனது கதவு தட்டப்படும் சத்தம் எனது நினைவைக் கலைத்தது. சாப்பிடக் கூப்பிடுவதற்காக அம்மாவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கதவைத் திறந்த எனக்கு அதிர்ச்சி. அங்கே கோபமாக உஷா நின்று கொண்டு இருந்தாள். அவளை அந்த நேரத்தில் நான் எதிர்பார்க்கவில்லை. 

"உஷா என்ன இந்த நேரத்திலே? " எனது கேள்விக்கு பதில் அளிக்காமல் எனது அறைக்குள் நுழைந்தவள், என்னிடம் எதுவும் பேசாமல் எனது மொபைல் போனை எடுத்து நீட்டினாள். குழப்பத்துடன் வாங்கிப் பார்த்தேன். அதன் டிஸ்ப்ளே, 36 மிஸ்டு கால் என்று காட்டியது. திறந்து பார்த்தேன், அனைத்தும் உஷாவிடம் இருந்து.

"சாரி உஷா, நான் வேற ஒரு முக்கியமான வேலையா இருந்தேன். அதனால தான் கவனிக்கல. I am Extremely Sorry" என்று அவள் அருகே அமர்ந்து அவளது கையைப் பிடித்தேன். உடனே கையை இழுத்துக் கொண்டாள்.

"சாயந்திரம் ஆறு மணிக்கு எங்கே இருந்தே? " சுவர் கடிகாரத்தை நோக்கிக் கொண்டே என்னைக் கேட்டாள்.

நான், "மதனும் நானும் ஒரு முக்கியமான விசயமா

முடிப்பதற்கு முன் "பொய் சொல்லாதே " என்று கத்தினாள்.

நான் " இல்லை உஷா, உண்மையாவே நான் மதனோட"

"நான் பார்த்தேன் சூரி. நீயும் ஜென்னியும் பார்க் ல பேசிட்டு இருந்ததை" அவளது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே உஷா கூறியதைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றேன். அடுத்த பத்து நிமிடங்கள் அங்கே கடிகார முள்ளின் ஓசையைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. இனி மறைத்து பிரயோஜனம் இல்லை என்று தோன்ற என் மனதில் உஷாவிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று ஒத்திகை பார்க்க ஆரம்பித்தேன்.

நான், "உஷா இதை நான் முதல்லயே சொல்லி இருக்கணும். ஆனா நீ எப்படி எடுத்துக்குவேனு தெரியலை. அதனால தான் சொல்லலை. எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள்லே சொல்லி இருப்பேன். ஆனா அதுக்குள்ள நீயே பார்த்துட்ட " உஷாவின் முகத்தில் கவலை ரேகைகள் அதிகமாகத் தெரிந்தது.

எனது கணினியில் அமர்ந்து ஜென்னியைப் பார்த்த நாளில் எழுதிய பக்கத்தைத் திறந்தேன். உஷாவை கண்களாலேயே படிக்க அழைத்தேன். அவள் குழப்பத்துடன் எழுந்து வந்து படிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போதும் அவளது முகத்தில் உணர்ச்சிகள் மாறிக் கொண்டே இருந்தது. ஜென்னியும் நானும் காதலைப் பரிமாறிக் கொண்ட தருணத்தைப் படித்தவள் அழுகை அதிகமானது. அவள் அருகே சென்று சமாதானம் செய்யும் தைரியம் இன்றி அவள் அழுது முடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

அழுது கொண்டிருந்தவள் ஏதோ தோன்றவே எனது கணினியை மறுபடியும் பார்த்தாள். பின்னர் காலண்டரை பார்த்தாள். பின் நம்ப முடியாமல் எனது கணினியின் திரையை மறுபடி பார்த்து விட்டு என்னைப் பார்த்து 

"ஆனா சூரி, இது எல்லாமே நீ 2010 ல எழுதி இருக்கே. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி. ஆனா ஜென்னியை இப்ப தானே" அவள் முகத்தில் கவலை ரேகை மறைந்து குழப்ப ரேகைகள் தோன்றின.

" எனக்கு ஜென்னியை முதலே தெரியும் உஷா. இது எல்லாமே உன்னை மீட் பண்றதுக்கு முன்னாடி நடந்தது " நான் எவ்வித உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் சொன்னேன். அவளது குழப்பம் அதிகமாகியது. நானாகவே தொடர்வேன் என்று எதிர்பார்த்து என்னை குழப்பம் அகலா பார்வையுடன் நோக்கினாள்.

நான் தொடர்ந்தேன், " அவகிட்ட நான் காதலை சொன்னதும் ரொம்ப சந்தோசமா எங்க வாழ்க்கை போச்சு. ஆனா ரொம்ப நாள் எங்க சந்தோசம் நிலைக்கலை. அவ பயந்த மாதிரியே நடந்திடுச்சு. விளையாட்டா எங்களுக்குள்ள் ஆரமிச்ச சண்டை நீயா, நானா-னு பெரிய ஈகோ பிரச்சனையா மாறி நாங்க பிரியற அளவுக்கு ஆயிடிச்சு. நான் எவ்வளவோ அவளை சமாதானப் படுத்தியும் அவ சமாதானமே ஆகலை.ஒரு காலத்துல என்னை அவமானப் படுத்தற மாதிரி நடந்துக்கிட்டா என்னால பொறுக்க முடியலை. நானும் பேசக் கூடாத வார்த்தைகள் சிலதை பேசிட்டேன். அப்புறம் அவளை என்னால பார்க்க கூட முடியலை. எங்கிட்ட சொல்லாம எங்கேயோ போயிட்டா. கொஞ்ச நாள் தேடி அலைஞ்சும் கண்டு பிடிக்கவே முடியலை". நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள் உஷா.

நானே மறுபடி தொடர்ந்தேன். " என்னால அங்க இருக்க முடியலை, அதான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு நம்ம கம்பெனில ஜாயின் பண்ணினேன். அப்புறம் உன்னை மீட் பண்ணுனேன். அதுக்கு அப்புறம் தான் கொஞ்ச கொஞ்சமா நார்மலான வாழ்க்கைக்கு திரும்பினேன். உன்னை எனக்கு பிடிச்சிருந்தாலும் இந்த குற்ற உணர்வு என் மனசை அரிச்சிட்டே இருந்திச்சு.ஜென்னி என்ன ஆனா, அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கானு தெரியாம எனக்காக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்க பிடிக்கலை. ஆனாலும் உன்னை மாதிரியான ஒரு பொண்ணை இழக்கவும் விரும்பலை. இருதலைக் கொள்ளி எறும்பு போல என் மனசுல பூட்டி வைச்சுட்டு உங்கிட்ட சொல்லவும் முடியாம, மறைக்கவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்." உஷா என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகவே இருந்தாள்.

"அப்புறம் அவளை நம்ம ஆபிஸ் ல மறுபடி பார்த்தப்ப என்னால நம்மவே முடியலை,எனக்கு என்ன பேசறதுனே தெரியலை. எதுவும் பேசாம வந்துட்டேன், நீ அவளுக்கு ப்ராஜெக்ட் போல்டர் செட் பண்ண ஹெல்ப் பண்ண சொன்னப்ப நான் தயங்கினதும் அதனால தான். இன்னைக்கு அவளும் நானும் பார்க் ல  பேசினதுக்கு அப்புறம் தான் எல்லாத்துக்கும் பதில் கிடைச்சு என் மனது நிம்மதி ஆச்சு" 

உஷா அதிர்ச்சி விலகாமல் "சோ..ரெண்டு பேரும் மறுபடி உங்க உறவை புதுப்பிக்க போறீங்களா?" என்று கவலையுடன் கேட்டாள்.

"இல்லை உஷா, அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சு" என்றேன்.

இதைக் கேட்டதும், அவள் முகத்தில், கொஞ்சம் நிம்மதி தெரிந்தது. "அப்போ வேற என்னதான் பேசினீங்க" என்று கேட்டாள்.

"அவ அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டா. தான் பண்ணுனது தப்புனு அவ பின்னாடி உணர்ந்தாலும்,அவ ஈகோ வை விட்டுட்டு அவளாலே என்னோட மறுபடி சேர முடியலைனு சொன்னா. நானும் நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்டேன். இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகி சந்தோஷமான வாழ்க்கை வாழறாளாம்.அவ கணவன் அவளை பூப்போல தாங்கறான். என்னைப் பார்த்து எல்லாம் சொன்னதும் அவ மனசும் ரொம்ப தெளிவா இருக்குனு சொன்னா. ஆனாலும் ஒரே இடத்துல இதுக்கு மேல வேலை பார்க்க முடியாதுனு தான் மேனேஜர் ஐ பார்த்து பேசி, அவ வேலையை ரிசைன் பண்ணிட்டாளாம்..என்னை சந்தோஷமான வாழ்க்கை அமைச்சுக்க சொல்லிட்டு, என் கல்யாணத்துக்கு கூப்பிட சொல்லிட்டு போயிட்டா.எனக்கும் என் மனசில இருந்த குற்ற உணர்வுலாம் போயி இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் உஷா" என்றேன்.

எல்லா குழப்பமும் அகன்று உஷாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. என்னைப் பார்த்து " இதை ஏன் எங்கிட்ட மறைச்சே, உன்னோட கடந்த காலம் எனக்கு முக்கியம் இல்லை. ஆனா நான் புரிஞ்சிக்க மாட்டேனு சொல்லி மறைச்சிட்டலே அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு" என்றாள்.

"இல்லை உஷா. உன்கிட்ட மறைச்சு உன்னை ஏமாத்தனும்னு நினைக்கலை. எப்படி இருந்தாலும் உன்கிட்ட சொல்லி இருப்பேன். ஆனா அதுக்கான சரியான நேரம் தான் அமையாம போச்சு" என்றேன்.

அவள், "நீ என்ன வேணா சொல்லு சூரி. நீ மறைச்சது தப்பு தான். ஆனாலும் பரவாயில்லை உன்னை பாவம்னு மன்னிச்சு விட்டுடறேன் " புன்னகையுடன் சொன்னாள்.

நான், " இப்போ தான் எல்லா உண்மையும் சொல்லிட்டேனே. அதனாலே " 

"அதனால? " என்று குறும்பு பார்வையுடன் என்னைப் பார்த்து கேட்டாள்.

"இப்பவும் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றேன்.

உஷா ஒரு நிமிடம் யோசித்து விட்டு  "ரெண்டு கண்டிசன்" என்று சொன்னாள். நான் என்ன என்பது போலப் பார்த்தேன்.

"ஜென்னியை, நம்ம கல்யாணத்துக்கு கூப்பிட கூடாது. உன் மேலே சந்தேகப்பட்டு சொல்லலை, பாஸ்ட் இஸ் பாஸ்ட் ஆவே இருக்கட்டும், நம்ம ப்ரெசெண்ட் லயும் ப்ஃயுச்சர் லயும் வர வேண்டாமே!!!"

"ரெண்டாவது, மூணு நாள் பார்த்த ஜென்னியைப் பத்தியே பக்கம் பக்கமா எழுதி இருக்கே, நான் உன்னோட ரெண்டு வருசமா இருக்கேன், என்னை பத்தியும் நீ ஒரு கதையா எழுதணும். சோ மிஸ்டர் ரிஷி, டீலா? நோ டீலா? " என்று சிரித்தவாறே கையை உயர்த்திக் கேட்ட உஷாவை, ஒரு நொடி கூட யோசிக்காமல் "டீல்" என்று கட்டி அணைத்தேன்.

-முற்றும்.

புதன், 11 ஜூலை, 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 5


பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் - 4பாகம் - 6


அடுத்த நாள் காலை ,நான் அலுவலகத்தில் நுழையும் போது தூரத்தில் ஜென்னியும், உஷாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள். யாராவது ஒருவர் சிரித்தாலே போதும், உடனே எங்களது திருமணப் பத்திரிக்கையை நீட்டி விடும் ரகம் உஷா. ஜென்னியை வேறு அவளுக்குப் பிடிக்கும், எங்களது திருமணத்தைப் பற்றி சொல்லி இருப்பாளோ? அதைக் கேட்டதும் ஜென்னியின் ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்? என் மனதிற்குள்ளே கேள்விகள் எழும்பி என் இதயத்தை தாறுமாறாக துடிக்கச் செய்தது. எனது நடையை வேகமாக்கி எனது கேபினுக்குள் நுழைந்தேன்.

என்னைப் பார்த்ததும் அதுவரை இயல்பாக பேசிக் கொண்டு இருந்த ஜென்னியின் பேச்சும் பார்வையும் தடுமாறத் துவங்கியது. அதனை உஷாவும் கவனிக்க தவறவில்லை. 

"உஷா, ஒரு முக்கியமான வேலையை மறந்துட்டேன். முடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் " - சொல்லிவிட்டு ஜென்னி அவளது இருக்கையை நோக்கி நகர்ந்தாள்.

"சூரி, உன்னைப் பார்த்துட்டு ஜென்னி ஏன் பேயைப் பார்த்த மாதிரி ஒடறா? " - உஷா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, "எனக்கு என்னவோ வெக்கப்பட்டு ஓடற மாதிரி இல்லை இருக்கு " - மதன் வெடியைப் பற்ற வைத்தான். 

உஷா அவனை முறைத்தவாறே, " ஆரம்பிச்சிட்டியா உன் நாரதர் வேலையை? அடுத்தவங்களுக்கு சிண்டு முடியறதுல உனக்கு அப்படி என்ன தான் சுகமோ ?" என்று கேட்க, மதன் அதற்கும் நக்கலாக ஏதோ பதில் சொல்ல, உஷா ஜென்னி விசயத்தை மறந்து அவனை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள். எப்படியோ என் தலை தப்பியது என்று நிம்மதி அடைந்து என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

எனது மெயில் பாக்ஸை திறந்த போது ஆச்சர்யம் அடைந்தேன். ஜென்னியிடம் இருந்து மெயில்

"We will meet at the park next to office at 6 PM today". 

அனுப்பிய நேரம் பார்த்தேன். இப்போது தான் ஒரு நிமிடம் முன்பு அனுப்பி இருக்கிறாள். எதைப் பற்றி பேசப் போகிறாள். ஒரு வேளை உஷா எங்களது திருமணத்தைப் பற்றி சொல்லி இருப்பாளோ? அது தெரியாமல் என் தலையே வெடித்து விடும் போல இருந்தது. 

மதனுக்கு மெசேஜ் அனுப்பினேன். "Did Usha talk about our marriage to Jennie? " 

உடனே அவனிடம் இருந்து பதில் வந்தது. "Let me ask Usha :) " 

அவனுக்கு பதில் அனுப்ப டைப் செய்கையில் "உஷாஜென்னி கிட்ட சொன்னியா? " - மதன் கேட்ட கேள்வியில் என் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்றது.

"எதைப் பத்தி கேட்கறே? " - உஷா அவனைக் குழப்பத்துடன் கேட்டாள். மதனைத் திரும்பி நான் பார்த்த பார்வையில் இருந்தது கோபமா, இல்லை வெறுப்பா என்று எனக்கே தெரியவில்லை.

என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, " நம்ம டீம் அவுட்டிங் பத்தி " என்று மதன் சொன்னதும் தான் நின்ற இதயம் துடிக்க ஆரம்பித்தது.

"மறந்தே போயிட்டேன், நல்ல வேளை நியாபகப் படுத்தினே " - சொல்லிவிட்டு ஜென்னியின் இருக்கையை நோக்கி நகர்ந்தாள். அவள் வெளியேறும் வரை காத்திருந்த நான், மதனிடம் திரும்பி

"மதன் நீ என்னை ரொம்ப டென்சன் ஆக்கிட்டு இருக்கே. எப்போ நான் வெடிக்க போறேனு எனக்கே தெரியலை " என்றேன்.

என்னைக் கூர்ந்து கவனித்தவன், " உனக்கும் ஜென்னிக்கும் நடுவிலே ஒண்ணும் இல்லைனு சொன்னே, இப்போ நீ ஏன் டென்சன் ஆகணும்? " எதிர் கேள்வி கேட்டு என்னை மடக்கினான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தேன்.

மதனே தொடர்ந்தான், "சூரி இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இதைப் பத்தி பேச இஷ்டம் இல்லைனா சொல்லிடு நான் எதுவும் கேக்கலை". எனக்கும் என் மனதில் இருப்பதை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும் என்று தோன்றியது. என் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு போராடிக் கொண்டு இருப்பது ரண வலியை ஏற்படுத்தியது.

உடனே அவனிடம், " மதன் இங்க வேண்டாம். கேண்டின் போய் பேசலாம் வா" என்று அவனை அழைத்துக் கொண்டு கேண்டின் சென்றேன். இரண்டு ஜீஸ் ஆர்டர் செய்து விட்டு அமைதியாக இருந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம். ஆனாலும் எப்படி துவங்குவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

"சொல்லு சூரி, கண்டிப்பா இப்ப நாம பேசறதை உஷா கிட்ட சொல்ல மாட்டேன். என்னை நீ நம்பலாம்" மதன் தான் தொடங்கி வைத்தான்.

அவனிடம் ஜென்னியை சந்தித்தது முதல் நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கொட்டினேன். நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தான். அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு,

"இப்போ சொல்லு மதன், நான் உஷா கிட்ட இதை எப்படி சொல்ல முடியும்? அவ இதை எப்படி எடுத்துக்குவானு எனக்குத் தெரியலை " என்றேன்.

"சூரி சொல்றேனு தப்பா நினைக்காதே. எப்படி இருந்தாலும் இந்த விசயத்தை அவளுக்கு தெரியாம ரொம்ப நாள் மறைக்க முடியாது. அவளா தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி நீயே சொல்லிட்டா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். உங்க ரெண்டு பேரையும் நல்லா தெரிஞ்சவன்கிற முறையில சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம் " என்று சொல்லி விட்டு கீழே செல்வதற்காக எழுந்தான்.

மதன் சொல்வது தான் சரியென எனக்கும் பட்டது. உஷாவிடம் என் மனதில் இருப்பதைக் கொட்டும் நாள் வந்து விட்டது. ஆனால் எப்படி எங்கே ஆரம்பிப்பது என்று தான் குழப்பமாக இருந்தது. இருப்பினும் மனதில் இருப்பதை மதனிடம் இறக்கி வைத்ததால் மனம் கொஞ்சம் தெம்பாகவும், தெளிவாகவும் இருந்தது.இருவரும் திரும்ப அலுவலகத்த்திற்குள் நுழைந்தோம்.

அங்கே எங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள் உஷா. எங்களைப் பார்த்ததும்,

"எங்கடா ரெண்டு பேரும் போயிட்டீங்க. என் தலையே வெடிக்கற மாதிரி நியூஸ் ஒண்ணு ஜென்னி சொன்னா" என்று நிறுத்தி விட்டு எங்களைப் பார்த்தாள்.

என்ன என்பது போல நாங்கள் இருவரும் அவளை நோக்க

"அவ வேலையை ரிசைன் பண்ணிட்டாளாம், அதனால அடுத்த வார அவுட்டிங்க்கு இங்க இருக்க மாட்டாளாம். எவ்வளவோ தடவை காரணம் கேட்டும் ஏன் வந்த மூணு நாளிலேயே ரிசைன் பண்றானு சொல்லவே இல்லை " - ஒரு குழப்பத்துடன் என்னைப் பார்த்தவாறே சொல்லிய உஷாவின் பார்வையை ஒதுக்கி வைத்து விட்டு, மதனை நோக்கி திரும்பினேன்.

என்னைப் போலவே அதிர்ச்சியும், குழப்பமும் கலந்த பார்வையுடன் மதன் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

- தொடரும்.

வியாழன், 28 ஜூன், 2012

அண்ணா சாலை ஆக்சிடெண்ட் கற்றுத் தந்த பாடம் என்ன?


நேற்று சென்னையில் ஜெமினி மேம்பாலத்தில் நடந்த பஸ் விபத்தைப் பற்றி நீங்கள் இன்னமும் அறியாமல் இருந்தால் உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கௌன்ட் இல்லை என்று அடித்து சொல்லி விடலாம். 

நேற்று ஒவ்வொரு தமிழனும் சாப்பிட மறந்தாலும் இந்த விஷயத்தை ஷேர் செய்தோ அல்லது லைக் செய்தோ "ஓட்டுனரின் கவன குறைவே காரணம்" என்றோ , " தரமற்ற பேருந்துகளை கொடுத்த அரசே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றோ , "அச்சச்சோ எவ்ளோ பேருக்கு அடி பட்டுச்சு? " என்றோ தங்களது கோபங்களையும், பரிதாபங்களையும் பதிவு செய்து தங்களுக்கும் சமுக நலனில் அக்கறை உள்ளது என்று தெரிவித்துக்  கொண்டதை பார்க்க முடிந்தது.

இந்த விபத்துக்கு காரணமாக பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. அதை
அலசி ஆராய்வது அல்ல இப்பதிவின் நோக்கம். முக்கியமான காரணமாக கூறப்படுவது "டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு வண்டியை ஓட்டியதால் ஏற்பட்ட கவனக் குறைவே" என்பதே. இதில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது என்பதை அப்பேருந்தில் பயணித்த சிலரோ அல்லது டிரைவரோ வாக்குமுலம் அளிக்கும் போது தான் தெரிய வரும். ஆனால் இது காரணமாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே இதுவரை வெளி வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் இதைப் பார்த்து கொந்தளித்து "மாநகர பேருந்து டிரைவர்கள் பணிக்கு செல்லும் போது செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் மிகப் பெரிய தண்டனை அளிக்க வேண்டும்" என்று நிறைய சமூக ஆர்வலர்கள் போர்க் கொடி உயர்த்துவது சந்தோஷமான விஷயம் என்றாலும் அதை அவர்கள் தங்களது வாழ்கையில் தங்களது சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது பின் பற்றுகிறார்களா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அத்தகையவர்களை விமர்சினம் செய்யும் எண்ணமும் இப்பதிவிற்கு இல்லை.இதற்கான பதிலை அவர்களே அவர்கள் மனசாட்சியிடம் பதில் அளித்துக் கொள்ளட்டும்.

ஆனால் ஒன்று நிச்சயம் செல்போன்  பேசிக்  கொண்டு  வாகனம்  ஓட்டும் அனைவருக்கும் இது ஒரு சவுக்கடி. ஒரு நொடியேனும் அவர்களைக் குற்ற உணர்வு தாக்கி மறுநிமிடமே மறந்தும் இருக்கலாம். ஆனால் இதன் பாதிப்பால் திருந்துபவர்  யார் என்று  யோசித்தால் அந்த  டிரைவரும் அவர்களின்  குடும்பமும்  மட்டுமே என்பது தான் நிதர்சன உண்மை.அதற்காக   அவர்கள் கொடுத்த விலை தான் அதிகம்.

இவ்விபத்து நடந்த சில நிமிடங்களியே, தனது டூ வீலரை ஒட்டியபடி "மச்சான் 17M டிரைவர் செல்போன் பேசிட்டு பிரிட்ஜ்ல விட்டுட்டனாமே?" என்று செல்போனில் கதைத்த படி செல்லும் இளம் வயதினரையும்....
"சொல்லு செல்லம்...வீட்டுக்கு வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடறேன்" என்று செல்போனைப் பாக்கெட்டில் வைத்தவாறே திரும்பி தனது கஸ்டமரிடம் "நீங்க சொல்றது கரெக்ட் சார், அந்த பஸ் டிரைவர் ஐ லாம் வேலையை விட்டே தூக்கிடனும்" என்று சொல்லும் ஆட்டோ டிரைவர்களையும் பார்த்து கொண்டே தான் இருக்க போகிறோம் என்னும் போது மனம் வலிக்கிறது. அவர்களை சாடுவதற்காக எழுதிய பதிவும் இல்லை இது!

அப்போ இந்தப் பதிவிற்கு என்ன தான் காரணம் என்று பொறுமை இழந்து கேட்டும் நண்பர்களே. நான் சில நாட்களுக்கு முன் செல்போனால் விபத்தில் முடிவதைப்  பற்றிய ஒரு வீடியோ பார்த்தேன். அன்று முதல் செல்போனை டிரைவர் சீட்-இல் இருக்கும் போது தொடுவதே இல்லை. அந்த அளவிற்கு என்னை பாதித்த வீடியோவை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் கொடுரமான வீடியோ அதனால் viewers discretion is recommended.


இந்த பதிவைப் பார்க்கும் என் நண்பர்களில் ஒருவரேனும் இனி வண்டி ஓட்டும் போது செல்போனை தொடுவதில்லை என்று முடிவெடுத்தால் அதை விட சந்தோசம் எனக்கு வேறு எதுவும் இருக்காது. என் சந்தோசத்திற்கான சுயநலமே இப்பதிவின் நோக்கம்!

திங்கள், 25 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 4.



பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -5பாகம் - 6

அன்று இரவு, வீட்டில் அமர்ந்திருந்த போது, மதன் என்னிடம் சொல்லிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து என்னை இம்சித்தது. 

"நான் செய்வது மிகத் தவறோ? அவன் சொல்வது போல உஷாவை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறேனோ? ஜென்னியைப் பற்றி உஷாவிடம் சொல்லும் தருணம் வந்து விட்டதோ??? " - என மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். 

அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தாலும்,இதை உஷாவிடம் சொன்னால் ஏற்படும் விளைவுகளை நினைக்கும் போது அவளிடம் இதைப் பற்றி பேசுவதற்கு இது சரியான தருணமா என்ற கேள்வி எழுந்து என்னை மேலும் குழப்பியது. யோசிக்க யோசிக்க குழப்பங்கள் தான் அதிகமானதே தவிர, அதற்கான சரியான விடை கிடைக்கவில்லை.

எப்போதும் போல மனதின் அமைதியைத் தொலைத்தால் என்ன செய்வேனோ அதையே இன்றும் செய்தேன். எனது கணினியில் என் ப்ரைவேட் ப்ளாஃக் ஒபன் பண்ணினேன். 

நான் ஜென்னியின் இருக்கையை நோக்கி சென்று கொண்டு இருந்தேன். தூரத்திலே எனை பார்த்ததும், கையை அசைத்து  

"ஹாய்" என்றாள். 

அவள் இருக்கைக்கு அருகே சென்று அவளது மேசையில் அமர்ந்தவாறே,  

"ஹாய், வேலை எப்படி போய்ட்டு இருக்கு? " என்று கேட்டேன். அவள் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு, 

"நல்ல வேலை யாரும் என்னோட கையை இங்கே பிடிச்சு வைக்கவில்லை, அதனால் வேலை நல்லாவே போகுது" என்று புன்னகையுடன் பதில் அளித்தாள். 

எங்களது முதல் சந்திப்பு என் மனத் திரையில் ஒருமுறை வந்து போக  "இன்னும் அதை நீ மறக்கவில்லையா, அதுதான் அப்பவே சாரி சொன்னேனே! எனி ஹஃவ் மறுபடி சாரி" என்று சொன்னேன். உடனே அவள் முகம் சற்று வாடியது.

"உண்மையாகவே நீ அதை மறந்து விட்டாயா? எப்படி உன்னால மறக்க முடிஞ்சது? " என்று என் கண்களை பார்த்து ஏக்கமாக கேட்டாள்.எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அந்த கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து  இருப்பதாக தோன்றியது.

"அப்படியானால் அவளுக்கும் ஒரு வேளை எனக்கு தோன்றியது போலவே தோன்றி இருக்குமோ???. அவளுக்கும் என் மேல் காதல் இருக்குமோ??? " நினைக்கும் போதே, அப்படியே ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல இருந்தது.நான் பதில் சொல்ல வாய் திறக்கும் போது அவள் சிரிக்க ஆரம்பித்தாள். 

"ஹா ஹா ஹா, ஏமாந்துட்டியா? சும்மா உன்னை டீஸ் பண்ண தான் விளையாட்டுக்கு சொன்னேன். பட் உன்னை இந்த மாதிரி டீஸ் பண்னுனா யுவர் ரியாக்ஸன் லுக்ஸ் சோ ஃபன்னி.சீரியசா எடுத்துக்காத "என்றாள். மனதில் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்து நானும் சிரித்தேன். 

மறுபடி அவளே தொடர்ந்தாள், "சூரி, உன்னை நேத்து தான் பார்த்தேனாலும், ரொம்ப நாளா பழகின மாதிரி ஃபீலிங். அதனால தான் கொஞ்சம் உரிமை எடுத்து விளையாடிட்டேன். உன்னை Hurt பண்ற மாதிரி இருந்திச்சுனா சொல்லிடு, I will not do that again" என்றாள்.

நான், "இல்லை, ஜென்னி, நான் தப்பா எடுக்கலை.உண்மையை சொல்லனும்னா, நீ இப்படி என்கிட்ட உரிமை எடுத்துக்கிறது எனக்கு ரொம்ப  பிடிச்சிருக்கு " என்றேன். 

அவள் விளையாட்டுக்கு என்று சொன்னது ஏமாற்றத்தை அளித்தாலும் அவளால் என்னுடன் சகஜமாக விளையாட முடிகிறது என்று சொன்னது என் மனதிற்கு இதமாய் இருந்தது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடிக்கவில்லை என்றால் இப்படி விளையாட முடியாது. வெறும் நட்பாகக் கூட இருக்கலாம், ஆனால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்த போதே என் காதலில் பாதி வெற்றி அடைந்ததைப் போல உணர்ந்தேன்.

அடுத்த ஐந்து நிமிடங்கள் அவள் தான் பேசிக் கொண்டே இருந்தாள். ஆனால் அவள் பேசியது தான் எதுவும் என் காதில் விழவில்லை! 

அவள் பேச்சின் போது அவள் தலை அசைவிற்கேற்ப அழகான ரிதமுடன் ஆடிக் கொண்டிருந்த அவளது  காதணிகள், பேச்சினூடே அவளது நெற்றியில் சரியும் முடியினை லாவகமாக ஒதுக்கி அவளது காதின் பின்புறம் சொருகும் அவளது அழகிய கை விரல்கள், அழகாக பராமரிக்கப் பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் வானவில் போல பல வண்ணங்களுடன் மின்னிய அவளது கை நகங்கள், அந்த விரல்கள் அவ்வப்போது விளையாடும் அழகிய டாலருடன் கூடிய அவளது செயின், அந்த செயின் குடியிருக்கும் அழகிய சங்கு போன்ற அவளது கழுத்து, மழை பெய்து சிறிது நேரம் கழித்து கண்ணாடி ஜன்னலில் அழகாக காட்சியளிக்கும்  சிறு நீர்த்துவளைகளைப் போல, அவளது பளிங்கு கழுத்தில் ஒட்டியிருந்த அழகிய வேர்வைத் துளிகள் என என் கவனம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருந்தது.

"ஹே இங்க ஒருத்தி எவ்வளோ கஷ்டப்பட்டு, கதை அடிச்சிட்டு இருக்கேன், நீ என்ன பகல் கனவு கண்டுட்டு இருக்கியா? " - என் தொடையை கிள்ளி என்னை ஜென்னி நிஜ உலகிற்கு கொண்டு வந்தாள்.

"Sorry, I just got Zoomed out. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தேன். 

அப்போது கை தவறுதலாக அவள் டேபிளின் மேல் இருந்த வண்டி சாவியைத் தட்டி விட அது கீழே விழுந்தது. அதனை எடுக்க அவள் குனிந்தாள். அனிச்சை செயலாய் நானும் குனிந்து எடுக்க, அவளது கை வண்டி சாவியையும், எனது  கை அவளது கையையும் பற்றியது. அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள், 

"இந்த முறை எவ்வளவு நேரம் என் கையை பிடிச்சிட்டு இருக்க போறே?"  என்று சிரித்து கொண்டே கேட்டாள். 

சில நேரங்களில் நாம் எவ்வளவோ யோசித்தாலும் நம் மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் சில சமயங்களில் நாம் எவ்வளவோ முயன்றாலும் நம் மனதில் இருப்பதை மறைக்க இயலாது. இந்த முறை எனது மூளையின் அனுமதியின்றியே எனது வாய் செயல்பட்டு அந்த வார்தையை உதிர்த்தது.

"என் வாழ் நாள் முழுவதும் ஜென்னி" 

நான் விளையாட்டிற்கு சொல்கிறேனா? இல்லை உண்மையாக சொல்கிறேனா என்று தெரியாமல் என் கண்களை ஜென்னி ஊடுருவிப் பார்த்தாள். அதில் தெரிந்த தீவிரத்தைக் கண்டு சிரிப்பதை நிறுத்தினாள். ஆனால் அவள் விழிகளை எனது விழிகளில் இருந்து நீக்கவில்லை. இருவரது கண்களும் கலந்தன. இருவரது இமைகளும் சில நொடிகள் இமைக்க கூட மறந்தன. அந்த நொடியை வீணாக்க விரும்பாமல்

"ஐ லவ் யு ஜென்னி" என்றேன். 

படபடவென்று பட்டாம் பூச்சி போல இமைத்தது அவளது இமைகள். அவள் நடப்பது எல்லாம் கனவா இல்லை நிஜமா என்று யோசிக்கிறாள் என்று அவளது முகம் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது. ஆனால் அவளது கண்களில் தெரிந்தது ஆனந்தமா இல்லை அதிர்ச்சியா  என்று தெரியவில்லை. சில நொடிகள் என்னை மீண்டும் உற்று நோக்கியவள் என் கைகளை விலக்கி விட்டு, எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.

"ஒரு வேளை நான் அவசரப்பட்டு விட்டேனோ? காதலைச் சொல்லி உருவாக இருந்த நல்ல நட்பினைக் கூட கெடுத்து விட்டேனோ? " என மனதில் தோன்ற, அதற்குள் என் மனதின் இன்னொரு குரலோ "ஒரு பெண்ணிடம் காதலை சொல்லவே தனி தைரியம் வேண்டும், சபாஷ் சூரி " என்று என்னைத் தட்டிக் கொடுக்க. ஜென்னியின் மனதில் என்ன இருக்குமோ என்று யோசித்தவாறே எனது இருக்கையை நோக்கி நகர்ந்தேன்.

-தொடரும்.

வியாழன், 21 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 3.



பாகம் -1பாகம் -2பாகம் - 4பாகம் - 5பாகம் - 6

அடுத்த நாள் காலை,  வேலையை பார்த்துக் கொண்டு இருந்த போது ஜென்னி எங்களது கேபின் நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்குள் படபடப்பு அதிகமாகியது. மதன் ஜென்னியைப் பார்த்ததும் "ஹலோ " என்று கூறி புன்னகைத்தான். அதற்கு அவளூம் பதிலாக புன்னகை புரிந்தாள்.

"என்ன பிகருடா இவ!!!" என்று அவன் தனக்குள் முணுமுணுக்க, நான் அவனை முறைத்தேன்.  "பாம்பு காதுடா உனக்கு " என்று கூறிவிட்டு, என் முறைப்பில் இருந்து தப்ப அவனது மானிட்டரில் ஆழ்ந்தான்.

ஜென்னி உஷாவிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்தி விட்டு பேச ஆரம்பித்தாள். என் மனதிற்குள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள தோன்றிய ஆர்வத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு என் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இருந்தாலும் இருவரும் சிரித்து சிரித்து பேசுவது என் காதில் விழாமல் இல்லை. ஆனாலும் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாகக் கேட்கவில்லை. என்னிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று ஜென்னியை சைட் அடிக்கும் எண்ணத்துடன் மதன் திரும்பி பார்க்க, ஜென்னி என்னை ஒரக் கண்ணால் அடிக்கடி பார்ப்பதை அறிந்து கொஞ்சம் அதிர்ந்தான். அவன் மூளை நான் நேற்று கோபமாகப் பேசியதையும், இதையும் இணைத்து வேகமாகக் கணக்கிட ஆரம்பித்தது. ஏதோ தோன்றியவனாக அவன் என்னைத் திரும்பி பார்க்க, நான் காரியமே கண்ணாக மானிட்டரில் ஆழ்ந்திருந்தேன். ஜென்னித் திரும்பி செல்வதும், உஷா என்னை நோக்கி வருவதையும், அவர்களது காலணி எழுப்பிய ஒலியில் புரிய, வேலையில் இன்னும் கவனமாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயற்சித்தேன்.

என்னிடம் வந்த உஷா, "சூரி, நீ பிஸியா இருக்கியா?" என்று கேட்டாள்.

மானிட்டரில் இருந்து என் விழியை அகற்றாமலேயே, "ஆமா, என்ன வேணும்" என்று கேட்டேன். எனது சேரைப் பிடித்து அவள் பக்கம் திருப்பி விட்டு

"அய்யாவுக்கு, என்ன வேணும்னு திரும்பி கேக்க கூட நேரம் இல்லை..அவ்ளோ பிஸியா?? " என்றாள்.

அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக அளித்து விட்டு, "ஒகே, சொல்லு என்ன வேணும்" என்றேன்.

"ஜென்னிக்கு அவளோட ப்ராஜெக்ட் போல்டர் செட் பண்ண ஹெல்ப் வேணுமாம். நீ தான் அதுல எக்ஸ்பர்ட்னு ஆச்சே, நீ ஃப்ரீயா இருக்கும் போது பண்ணித் தரயா? " என்று கேட்டாள்.

அதற்கு நான், "இல்லை உஷா, I have lot of stuffs to finish today. என்னால முடியாது " என்றேன். உண்மையிலேயே பெரிதாக வேலை இல்லை என்றாலும் பொய் சொன்னேன்.

உடனே உஷா, "ஹே just 10 minutes எனக்காக ப்ளீஸ் " என்றாள்.

"சாரி உஷா, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. இன்னைக்கு நான் இந்த ரிப்போர்ட்ஸ் அனுப்பலைனா பெரிய level la Escalate ஆயிடும்" என்று பொய்யை மெய்பிக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். தொடர்ந்து, "இதோ இவன் வெட்டியா தானே இருக்கான், இவனை அனுப்பு " என்றேன் மதனைக் காட்டி. 

மதனுக்கு ஆச்சர்யாக இருந்தது. ஜென்னி பேரை உஷா சொன்னதுமே நான் உதவ உடனே தயாராக இருப்பேன் என்று நினைத்தான். ஆனால் நான் மறுத்தது அவனுக்கு என் மேல் ஆச்சர்யத்துடன் சந்தேகத்தையும் சேர்த்து கிளப்பியது. இருந்தாலும் ஒரு அழகிய பெண்ணுக்கு உதவ கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் 

"Yeah, I can help her" என்று அவன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

அதற்கு உஷா அவனைப் பார்த்து, " ஒரு பொண்ணைப் பார்த்தாப் போதுமே, ஜொள்ளு விட்டுட்டு கிளம்பிடுவேயே!! நீ உக்காரு" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 

"டே, இது டெவலப்மெண்ட் சம்பந்தமான வேலை, அவனுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? உனக்கு மட்டும் தான் தெரியும். நீ ஹெல்ப் பண்ணுடா ப்ளீஸ். அவ ரொம்ப நல்லா பழகறா. நல்ல பொண்ணா தெரியறா, நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேனு ப்ராமிஸ் பண்ணிட்டேன்..எனக்காக சூரி ப்ளீஸ் " என்றாள்.

உடனே மதன் " யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குது. அதோட தலைவிதியை யாரால மாத்த முடியும்" என்று முணுமுணுத்தான். நான் அவனை முறைத்தேன். உஷாவுக்கு சரியாக கேக்காததால், 

"என்ன" என்று கேட்டாள். 

நான் உடனே, "விடு கடுப்பிலே ஏதோ உளர்றான், சரி உனக்காக நான் அவளுக்கு ஹெல்ப் பண்றேன்." அந்த "உனக்காகவை" கொஞ்சம் அழுத்திச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த பத்தாவது நிமிடம், நான் எனது இருக்கைக்கு திரும்பி வர, உஷா இருக்கையில் இல்லை. மதன் மட்டும் தான் தனியாக இருந்தான். என்னைப் பார்த்ததும்

"சார், எல்லாம் நீங்க நினைக்கிற படியே நல்லா நடக்குதா? "என்று நக்கலாகக் கேட்டான். நான் அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல் எனது இருக்கையில் அமர்ந்தேன். அவனே தொடர்ந்தான்.

"எனக்கு எல்லாம் புரியற மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. ஆனா நீ நல்லாவே நடிக்கறடா " என்றான். நான் அவன் எதைப் பத்திப் பேசுகிறான் என அறிந்தும் புரியாதது போல அவனைப் பார்த்து விட்டு

"நீ என்ன பேசறேனு எனக்கு புரியலை மதன். எனிவே, எனக்கு நிறைய வேலை இருக்கு. வெட்டிப் பேச்சை அப்புறமா வைச்சுக்கலாம் " என்று என் மானிட்டரில் கவனம் செலுத்த, மதன் எனது இருக்கை நோக்கி வந்து எனது மானிட்டரை அணைத்தான்.

"உஷாவை ஏமாத்துன மாதிரி என்னையும் ஏமாத்த முடியாது சூரி. நீ காலைல வந்ததுமே அந்த ரிப்போர்ட் ஐ அனுப்பிட்டேனு எனக்குத் தெரியும். சரி நான் நேராவே விசயத்துக்கு வரேன். உனக்கும் ஜென்னிக்கும் நடுவிலே என்ன நடக்குது? " என்று கேட்டான்.

நான், "எனக்கும் அவளுக்கும் நடுவிலயா?? ஓ மை காட்.. உனக்கு மறை கழண்டுடிச்சுனு நினைக்கிறேன். வா போய் கூலா ஏதாச்சும் சாப்பிவோம், உன் பித்தம் அப்பவாச்சும் தெளியுதானு பார்ப்போம் " பேச்சை வேறு திசையில் கொண்டு செல்ல முயன்றேன்.

"நடிக்காத சூரிஎதுவும் இல்லைனா, நீ அவளைப் பத்தி தப்பா பேசுனதும் எதுக்கு கோபப் பட்டே? அவள் உன்னை ஆயிரம் தடவை யாருக்கும் தெரியாம பார்த்தாளே அதுக்கு என்ன அர்த்தம்? உஷாக்கு உன் மேல doubt வரக் கூடாதுனு ஜென்னிக்கு ஹெல்ப் பண்ண interest ஏ இல்லாத மாதிரி நடிச்சியே அதுக்கு என்ன அர்த்தம்?" கேள்விக் கணைகளால் துளைத்தான்

"மதன் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நீயாவே எதை எதையோ முடிச்சு போட்டு கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை " ஒட்டாமல் பதில் அளித்து விட்டு எனது மானிட்டரை ஆன் செய்தேன்.

அதற்கு மதன் மறுபடி எனது மானிட்டரை ஆப் செய்து விட்டு "சூரி எனக்கு பதில் தெரிஞ்சாகணும், நீ என் கிட்ட இருந்து அவ்ளோ ஈசியா தப்பிக்க முடியாது" என்றான்.

"மதன்..You are seriously F*&^%$#@ irritating me..எங்களுக்குள்ளே எதுவும் இல்லை.அப்படி இருந்தாலும் நான் உன் கிட்ட எல்லாமே சொல்லணும்கிற அவசியம் இல்லை" கொஞ்சம் சூடாகவே பதில் அளித்து விட்டு எனது மானிட்டரை மீண்டும் ஆன் செய்தேன். அவன் என்னிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. ஏதோ சொல்ல வாய் திறக்கையில் உஷா நுழைவதைப் பார்த்து அமைதியானான்.

"சூரி சீக்கிரம் வெளியே வா, நான் உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தேன்ல ஒரு கார் சூப்பரா இருக்கு, அதே மாதிரி காரை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கனும்னு..அந்த கார் வெளியே நிக்குது, உனக்கு காமிக்கிறேன். மதன் நீயும் வா" என்று ஒரு குழந்தைப் போல உற்சாகத்துடன் என் கையைப் பிடித்து இழுத்து சென்றாள். 

அப்போது மதன் என்னைப் பார்த்த பார்வை "இவளை ஏமாத்த உனக்கு எப்படிடா மனது வந்துச்சு" என்று சொல்வது போல இருந்தது. அவனது பார்வையை சந்திக்க இயலாமல் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உஷாவைப் பின் தொடர்ந்தேன்.

-தொடரும்.